பாஜக தமிழகத் தலைவர் அண்ணாமலை 
தமிழ் நாடு

தமிழகத்தில் 5 முனை போட்டி! - அண்ணாமலை

Staff Writer

'தமிழகத்தில் ஐந்து முனை போட்டி நிலவி வருகிறது. 2026ஆம் ஆண்டு தமிழகத்தில் யார் ஆட்சி அமைத்தாலும், கூட்டணி ஆட்சி தான் அமையும்' என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

கோவையில் தனியார் செய்தி சேனலுக்கு அண்ணாமலை அளித்த பேட்டியில், ”அரசியலுக்கு வந்துள்ள விஜய்யை நான் வரவேற்கிறேன். உச்சத்தில் இருக்கும் ஒரு மனிதர் அரசியலுக்கு வர வேண்டும் என்று நினைக்கிறார். அரசியலில் ஏற்ற, இறக்கங்களை சந்திப்பார். துரோகிளை சந்திப்பார். கருணாநிதி, ஜெயலலிதாவைப் போல் நீண்ட அரசியல் பயணத்தை மேற்கொள்ளட்டும். ஒரு தேர்தலில், எதையும் மாற்ற முடியாது.

தமிழகத்தில் இன்றைக்கு திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர், தவெக என 5 முனை போட்டி நிலவுகிறது. 5 கட்சிகளும் வெவ்வேறு அரசியலை முன்னெடுத்து வருகின்றன. திமுக சரியாக அரசியல் பண்ணுகிறோம் என்று சொல்கிறார்கள். அதிமுக சரி செய்வோம் என்று சொல்கிறார்கள். பாஜக புது அரசியலை கொண்டு வருவோம் என்று சொல்கிறோம். சீமான் எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்று கேட்கிறார்.

எல்லோரும் ஒன்றியணைய வேண்டும் என்பது நயினார் நாகேந்திரன் ஆசைப்படுகிறார். 2026ஆம் ஆண்டை பொறுத்தவரை எல்லோரும் தெளிந்து ஓட்டு போட போகிறார்கள். 2026ஆம் ஆண்டு தமிழகத்தில் யார் ஆட்சி அமைத்தாலும் கூட்டணி ஆட்சி தான் அமையும். களம் மாறிவிட்டது. 2026இல் பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைய வேண்டும் என்று எனக்கு ஆசை.

இன்றைய காலகட்டத்தில் கூட்டணி அமைப்பது என்பது சாத்தியமில்லை. மாநில தலைவராக இருக்கும் நான் கவனத்துடன் பேச வேண்டும். 2026ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிமுக, தவெகவுடன் கூட்டணி இல்லை.” இவ்வாறு அண்ணாமலை கூறினார்.