தமிழகத்தில் உள்ள இரண்டு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான எண்ணிக்கையை தேசிய மருத்துவ ஆணையம் அதிகரித்து உள்ளது.
நடப்பு கல்வியாண்டான 2026 - 2027-ல் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி, திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு தலா 50 கூடுதல் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
மருத்துவ மதிப்பீடு - தரமதிப்பீட்டு வாரியம், 2019 ஆம் ஆண்டின் தேசிய மருத்துவ ஆணையச் சட்டத்தின் கீழ் இரு கல்லூரிகளுக்கும் 100ஆக இருந்த மருத்துவ இடங்களை 150ஆக அதிகரிப்பதற்கான அனுமதிக் கடிதங்களை வழங்கியது.
இதனால் தமிழகத்தில் 36 அரசுக் கல்லூரிகளில் உள்ள மொத்த மருத்துவக் கல்லூரிகளின் இடங்கள் 5,510ஆக உயர்ந்துள்ளது.
ஐந்து ஆண்டுகளில், மருத்துவக் கல்லூரிகளின் இடங்கள் முதல் முறையாக நடப்பு ஆண்டில்தான் அதிகரிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2021ஆம் ஆண்டு, கோயம்புத்தூர் அரசுக் கல்லூரிக்கு 50 இடங்களை அதிகரிக்க அனுமதி கொடுத்த தேசிய மருத்துவ ஆணையம், மீண்டும் தற்போது 2026-ல் தான் 100 மருத்துவ இடங்களை தமிழகத்தில் அதிகரிக்க அனுமதி கொடுத்துள்ளது.
மேலும், திருவள்ளூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிக்கும் கூடுதலாக 50 இடங்கள் அதிகரிக்க ஒப்புதல் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.