இன்று நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவில் 84.69 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, மாலை 6 மணிவரையிலான விவரப்படி, 84.29 சதவீத வாக்குப்பதிவு என தகவல்கள் வெளியாகியிருந்தன. அதைத் தொடர்ந்து தேர்தல் ஆணையத்தின் துணை இயக்குநர் பவன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவரங்கள் இன்னும் வரப்பெறாத முடிவுகளைச் சேர்த்தால் மிகச் சிறிய அளவில் கூடவும் வாய்ப்பு உண்டு.
இதேசமயம், மேற்கு வங்கத்தில் இன்று நடைபெற்ற முதல் கட்டத் தேர்தலில் 91.78 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன என்றும் ஆணையம் கூறியுள்ளது.
இரண்டு மாநிலங்களிலும் வரலாறுகாணாத வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
கடந்த 2011 தேர்தலில் தமிழகத்தில் 78.29 சதவீதமும் மேற்குவங்கத்தில் 84.72 சதவீதமும் வாக்குகள் அதிக அளவில் பதிவாகியுள்ளன.