முதல்வர் ஸ்டாலின் - மாணவி பிரேமா 
தமிழ் நாடு

“சாதனை மாணவி பிரேமாவுக்கு புதிய வீடு”- முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவிப்பு!

Staff Writer

மாணவி பிரேமாவின் உருக்கமான பேச்சைத் தொடர்ந்து, அவரது குடும்பத்திற்கு ‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் புதிய வீடு ஒதுக்கீடு செய்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ என்ற நிகழ்ச்சியில், ஒழுகும் வீட்டில் வசிக்கும் தனது தந்தையின் நிலை குறித்து பிரேமா கண்ணீர் மல்க பேசியது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மட்டுமல்லாது பலரையும் உலுக்கியது.

நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது, “அப்பா – அம்மா இருவருமே சின்ன வயசிலிருந்தே ரொம்ப கஷ்டப்பட்டிருக்காங்க. கஷ்டப்பட்டு ஒரு ஓட்டு வீடு வாங்கினோம். அது மழை ஒழுகும். நான் ஹாஸ்டலில் தங்கிக் காலேஜ் படித்தேன். மழை பெய்தால் ஹாஸ்டலில் தெரியவே தெரியாது. அப்போது, வீட்டை பத்திதான் யோசிப்பேன். வீடு ஒழுகிட்டு இருக்குமே, அப்பா –அம்மா என்ன செய்றாங்களோ என்ற யோசனை ஓடிக்கொண்டே இருக்கும். எப்படியாவது அப்பா – அம்மாவுக்கு வீடு கட்டிக் கொடுத்துவிட வேண்டும்.” என்று பேசினார்.

அவர் பேசிய காணொளியை தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “ஒழுகும் வீட்டில் அப்பா இருப்பாரே என்ற கவலை பிரேமாவுக்கு இனி வேண்டாம்!

எத்தனையோ பேரின் எதிர்ப்பையும் மீறி உங்களைப் படிக்க வைத்த தந்தையிடம், முதல் மாதச் சம்பளத்தைத் தந்து நீங்கள் மகிழ்ச்சி அடைந்தீர்கள்! உங்கள் கனவை நிறைவேற்றிய தந்தைக்கு ‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்தின்கீழ் புதிய வீடு கட்டிக் கொடுப்பதற்கான ஆணையை வழங்கி நான் மகிழ்ச்சி கொள்கிறேன்” என கூறியுள்ளார்.

இதனையடுத்து, முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டதின் பேரில், பிரேமா அவர்களின் குடும்பத்துக்கு ‘கலைஞர் கனவு இல்ல’ ஆணையைத் தென்காசி மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று வழங்கினார்.