ஆதவ் அர்ஜுன் 
தமிழ் நாடு

ஆதவ் அர்ஜுனா 6 மாதங்களுக்கு இடைநீக்கம்! - விசிக

Staff Writer

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா கட்சியிலிருந்து 6 மாதங்களுக்கு இடைநீக்கம் செய்யப்படுவதாக அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அறிவித்துள்ளார்.

சமீபத்தில் அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய ஆதவ் அர்ஜுன், தமிழகத்தில் உள்ள மன்னராட்சிக்கு முடிவுகட்ட வேண்டும் என பேசியிருந்தார்.

இவர் திமுகவை நேரடியாக தாக்கி பேசியது அக்கட்சி நிர்வாகிகள், தொடண்டர்கள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனால், ஆதவ் அர்ஜுனா விசிக-விலிருந்து நீக்கப்படுவரா என்ற கேள்வி எழுந்தது.

இந்தநிலையில், அவர் விசிகவிலிருந்து 6 மாத காலத்திற்கு இடைநீக்கம் செய்யப்படுவதாக தொல்.திருமாவளவன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்:

1. கட்சியின் துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா அவர்கள் அண்மைக் காலமாக கட்சியின் நலன்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறார் என்பது தலைமை நிர்வாகத்தின் கவனத்துக்குத் தெரிய வந்தது.

2. இது குறித்து கடந்த 07-12-2024 அன்று கட்சியின் பொதுச் செயலாளர்கள் உள்ளிட்ட முன்னணித் தோழர்களுடன் கலந்தாய்வு செய்யப்பட்டது.

3. கட்சித் தலைமையின் அறிவுறுத்தல்களையும் மீறி, தொடர்ச்சியாக அவர் எதிர்மறையாக செயல்பட்டு வருவதும்; அத்தகைய செயல்பாடுகள், மேலோட்டமாக நோக்கினால் கட்சியின் நலன் மற்றும் அதிகார வலிமைக்கானதாகத் தோன்றினாலும்; அவை கட்சி மற்றும் தலைமையின் மீதான நன்மதிப்பையும் நம்பகத் தன்மையையும் கேள்விக்குள்ளாக்கும் வகையில், பொதுவெளியில் கடுமையான விமர்சனங்களை உருவாக்கியிருக்கிறது.

4. இத்தகைய போக்குகள், கட்சிப் பொறுப்பாளர்களிடையே நிலவும் கட்டுக்கோப்பைச் சீர்குலைக்கும் வகையில், கட்சிக்குள்ளேயே ஒரு எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், கட்சியினருக்கு இது ஒரு "தவறான முன்மாதிரியாக" அமைந்து விடும் என்கிற சூழலையும் உருவாக்கியுள்ளது.

5. இத்தகைய சூழலைக் கருத்தில் கொண்டு, கட்சியின் நலன்களை முன்னிறுத்தி, கட்சித் தலைவர் மற்றும் பொதுச்செயலாளர்கள் ஆகிய மூவர் உள்ளடங்கிய தலைமை நிர்வாகக் குழுவில், ஆதவ் அர்ஜுனா அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்வதென தீர்மானிக்கப்பட்டது.

6. அதன்படி, ஆதவ் அர்ஜுனா கட்சியிலிருந்து ஆறுமாத காலத்துக்கு இடைநீக்கம் செய்யப்படுகிறார்.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.