எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்த நடிகை கெளதமி
எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்த நடிகை கெளதமி 
தமிழ் நாடு

நடிகை கெளதமியும் அ.தி.மு.க.வில் இணைந்தார்!

Staff Writer

பா.ஜ.க.விலிருந்து விலகிய நடிகை கெளதமியும், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இன்று அக்கட்சியில் இணைந்துள்ளார்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பா.ஜ.க.விலிருந்து விலகுவதாக அறிவித்த நடிகை கெளதமி, “ 25 ஆண்டுகள் தொடர்ந்து விசுவாசமாக இருந்தேன். இருந்தபோதும், என்னை ஏமாற்றிய அழகப்பனுக்கு கட்சியின் மூத்த நிர்வாகிகள் உதவி செய்திருப்பதை அறிந்து நொறுங்கிப் போனேன். மிகுந்த வலி மற்றும் வேதனையுடனும், கடும் உறுதியுடனும் ராஜிநாமா கடிதத்தை எழுதுகிறேன்.” என்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.

பல மாதங்களுக்குப் பிறகு கௌதமி, சென்னை இராஜா அண்ணாமலைபுரம், கிரீன்வேஸ் சாலையில் உள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்படி பழனிசாமியின் இல்லத்தில் சந்தித்து, அ.தி.மு.க.வில் தன்னை இணைத்துக்கொண்டார்.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அ.தி.மு.க.வின் ஐ.டி.பிரிவு செயலாளர் ராஜ் சத்தியன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

முன்னதாக, பா.ஜ.க.விலிருந்து விலகிய காயத்ரி ரகுராம் கடந்த வாரம் அ.தி.மு.க.வில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.