மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் வரும் 2027ஆம் ஆண்டு புத்தாண்டு தினம் முதல் புறநோயாளிகள் சிகிச்சைப் பிரிவு செயல்படத் தொடங்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கடந்த 2021ஆம் ஆண்டு, மதுரையைச் சேர்ந்த புஷ்பவனம் என்பவர், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் தற்காலிக வெளிநோயாளிப் பிரிவு சேவைகளை வழங்கவும், எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கையையும், வகுப்புகளை நடத்தவும், காலிப் பணியிடங்களை நிரப்பவும் உத்தரவிட வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்திருந்தார்.
நேற்று இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
"மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் நர்சிங் கல்லூரி, நிர்வாகப் பிரிவு, வெளிநோயாளிகள் பிரிவு, மாணவ மாணவியர் விடுதிகள், சேவைப்பிரிவு ஆகிய கட்டடங்களின் பூச்சு வேலைகள் நடைபெற்று வருகின்றன.
நர்சிங் விடுதி, உள்நோயாளிகள் பிரிவு, அவசரச் சிகிச்சைப் பிரிவு, இரவு தங்குமிடம், ஆயுஷ் மருத்துவ பிரிவு, பிணவறை, கலையரங்கம் ஆகியவற்றின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த அனைத்து எம்.பி.பி.எஸ். மாணவர்களும் படிப்படியாக எய்ம்ஸ் வளாகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.
மத்திய அரசின் வழிகாட்டுதல்களின்படி, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் முழுமையான புறநோயாளிகள் பிரிவு, வரும் 01.01.2027 முதல் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படட்டு வருகின்றன." என்று மத்திய அரசின் பதில்மனுவில் கூறப்பட்டுள்ளது.