அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் பிரியாணி கடை நடத்தி வந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு பயிலும் பொறியியல் மாணவி கடந்த 21ஆம் தேதி இரவு பல்கலைக்கழக வளாகத்தில் ஒதுக்குப்புறமான இடத்தில் மூன்றாம் ஆண்டு பயிலும் தனது காதலனுடன் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த நபர், மாணவனை சரமாரியாகத் தாக்கியதோடு, மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
தமிழ்நாட்டின் மிக முக்கியமான கல்வி நிறுவனத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் பிரியாணி கடை நடத்தி வந்த ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை கோட்டூர்புரத்தில் சாலையோரம் பிரியாணி கடை நடத்தி வந்தவர் ஞானசேகரன். இவர் கடந்த 21ஆம் தேதி இரவு பிரியாணி விற்பனையை முடித்துவிட்டு அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு பேசிக்கொண்டிருந்த காதலர்களான மாணவர்களை தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். பின்னர் தான் ஒரு போலீஸ் எனக்கூறி மிரட்டி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தற்போது கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரன், சில ஆண்டுகளுக்கு முன் இதேபோன்று பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது திருட்டு, வழிப்பறி உள்பட 15க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது.
ஞானசேகரின் செல்போனில் இருந்து பல வீடியோக்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர். இதையடுத்து, பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவியிடம் வீடியோ கால் மூலம் குற்றவாளி ஞானசேகரன் என்பதை போலீசார் உறுதி செய்தனர். இதனைத் தொடர்ந்து ஞானசேகரனிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.