ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் ஏ1 குற்றவாளியாக கருதப்ப்டும் நாகேந்திரன் கல்லீரல் பாதிப்பால் சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார்.
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு ஜூலை 5ஆம் தனது வீட்டிற்கு அருகே வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து செம்பியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏ1 குற்றவாளியாக நாகேந்திரன், பொன்னை பாலு உள்பட 27 பேரை கைது செய்தனர். 2 பேர் வெளிநாட்டில் தலைமறைவாகி உள்ளதால், அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்த வழக்கை விசாரித்த செம்பியம் போலீசார் வழக்கின் குற்றப்பத்திரிகையை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். தற்போது, இந்த வழக்கை மாவட்ட முதன்மை நீதிபதி கார்த்திகேயன் விசாரித்து வருகிறார்.
இதற்கிடையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றம் செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த சூழலில் ஆயுள் தண்டனை கைதியும், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏ1 குற்றவாளியாகவும் உள்ள பிரபல ரவுடி நாகேந்திரனுக்கு, கல்லீரல் பாதிப்பால் உடல்நிலை மோசமானதை அடுத்து சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியான ரவுடி நாகேந்திரன் இன்று காலை உயிரிழந்தார்.