பா.ம.க. நிறுவனர் இராமதாசின் வீட்டின் முன்பு 'தயவுசெய்து அரசியல் பேச வேண்டாம்' என்ற வாசகத்துடன் அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற தனது 88ஆவது பிறந்தநாள் விழாவில், தான் அரசியல் துறவறம் மேற்கொள்ளப் போவதாகவும், ’இனி அரசியல் பேச மாட்டேன்’ என்றும் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அறிவித்திருந்தார்.
அதைத் தொடர்ந்து, விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகேவுள்ள தைலாபுரம் இல்லத்தில் இருக்கும் இராமதாஸ், தினமும் தனது தொண்டர்கள், சமூக ஆர்வலர்கள், முக்கிய பிரமுகர்கள் ஆகியோரைச் சந்தித்து வருகிறார்.
இப்படி அவரைச் சந்திக்கச் செல்பவர்கள் அவரிடம் அரசியல் பேச வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டாலும், சிலர் பேச முயல்கின்றனர்.
இதனால், அவருடைய தைலாபுரம் இல்லத்தின் நுழைவாயிலில், அறிவிப்புப் பலகை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அதில், அரசியல் துறவறம் மேற்கொண்ட காரணத்தால், தைலாபுரம் தோட்டத்திற்கு சந்திக்க வரும் பார்வையாளர்கள் 'தயவுசெய்து அரசியல் பேச வேண்டாம்' என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது.