சென்னை பரந்தூர் விமான நிலையப் பணிகள் கைவிடப்படும் என்று சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் அறிவித்தார்.
இதுகுறித்து அவையில் அவர் கூறியதாவது:
"ஏற்கெனவே, நான் உறுதி அளித்தவாறு, பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க மேற்கொண்ட நடவடிக்கைகள், இந்த அரசால் கைவிடப்படும்.
துறைசார்ந்த வல்லுநர்கள், கல்வியாளர்கள் ஆகியோர்களிடம் கலந்தாலோசித்து விவசாய நிலங்கள், குடியிருப்புகளுக்குப் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாதவாறு புதிய விமான நிலையம் அமைப்பதற்கான பொருத்தமான சில மாற்று இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
அவ்விடங்களின் தொழில்நுட்ப ரீதியான சாத்தியக்கூறுகளை சம்மந்தப்பட்ட துறைகள் மூலம் விரிவான ஆய்வு மேற்கொண்டு புதிய விமான நிலையத்திற்கான இடம் விரைவில் இறுதி செய்யப்படும்.
இதற்கிடையில், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தை மேலும் விரிவாக்கம் செய்து, அதன் வடமேற்குப் பகுதியில் ஆண்டுக்குக் கூடுதலாக 20 மில்லியன் பயணிகளைக் கையாளக்கூடிய புதிய பயணிகள் முனையம் அமைக்க, இந்திய விமான நிலைய ஆணையத்துடன் இணைந்து, அணுகுசாலை, மேம்பாலம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இதன்மூலம், சென்னை விமான நிலையத்தின் சேவைகள் மேம்படுத்தப்படுவதோடு, பயணிகளின் போக்குவரத்துத் தேவை புதிய விமான நிலையம் அமைக்கப்படும்வரை பூர்த்தி செய்யப்படும்." என்று முதலமைச்சர் விஜய் கூறினார்.