சென்னையில் ரேசன் அட்டை தொடர்பான குறைகேட்பு முகாம் நாளைமறுநாள் 9ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொது விநியோகத் திட்டத்தின் பயன்களை குடிமக்கள் எளிதில் பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, சென்னையில் நவம்பர் மாதத்திற்கான மாதாந்திர மக்கள் குறைகேட்பு முகாம், உணவுப்பொருள் வழங்கல் - நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் 19 மண்டலங்களின் உதவி ஆணையாளர் அலுவலகங்களில், வரும் 9ஆம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல்1 மணிவரை நடைபெறவுள்ளது.
இதில், ரேசன் அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், செல்பேசி எண் பதிவு / மாற்றம் செய்தல் ஆகியவை மேற்கொள்ளப்படும்.
மேலும், நியாய விலைக் கடைகளில் பொருள் பெற நேரில் வருகை தர இயலாத மூத்த குடிமக்கள் போன்றவர்களுக்கு அங்கீகாரச் சான்று வழங்கப்படும்.
பொது விநியோகக் கடைகளின் செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்களையும் இம்முகாமில் தெரிவித்தால், குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் உணவுப்பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.