கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகத்தை திறந்து வைத்த முதலவர் ஸ்டாலின் 
தமிழ் நாடு

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகத்தை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்!

Staff Writer

கள்ளக்குறிச்சி மாவட்டம், வீரசோழபுரத்தில் 8 தளங்களுடன் கட்டப்பட்ட மாவட்ட ஆட்சியரகத்தின் புதிய கட்டடத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தின் கீழ் கள்ளக்குறிச்சி பகுதிகள் இயங்கி வந்த நிலையில், 2019 ஆம் ஆண்டு புதிய மாவட்ட அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து தமிழகத்தின் 34 ஆவது மாவட்டமாக விழுப்புரத்திலிருந்து பிரிக்கப்பட்ட கள்ளக்குறிச்சி உருவானது.

இந்த மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, சங்கராபுரம், ரிஷிவந்தியம் ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. 2 வருவாய்க் கோட்டங்கள், 9 வருவாய் வட்டாட்சியரகங்கள், 562 வருவாய்க் கிராமங்களைக் கொண்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 412 கிராம ஊராட்சிகள் உள்ளன.

கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, கல்வராயன்மலை, திருநாவலூர், சங்கராபுரம், ரிஷிவந்தியம் உள்ளிட்ட9 ஒன்றியங்களும் அமைந்துள்ளன.

பல்வேறு சிறப்புகளைக் கொண்ட கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகக் கட்டடம் நகருக்குள் இயங்கி வந்தது. அரசுத் துறைகளின் அலுவலகங்கள் பல வெவ்வேறு இடங்களில் இயங்கி வந்தன.

இந்த நிலையில், அனைத்துத் துறை அரசு அலுவலகங்களும் ஒரே இடத்தில் இயங்கும் வகையில், வீரசோழபுரம் பகுதியில் 13.66 ஏக்கர் பரப்பளவில் 8 தளங்களுடன் கொண்ட புதிய மாவட்ட ஆட்சியரகக் கட்டடம் ரூ. 139.41கோடியில் கட்டி முடிக்கப்பட்டது.

மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்டக் கருவூலம், வேலைவாய்ப்பு அலுவலகம், மாற்றுத் திறனாளிகள் அலுவலகம், மக்கள் குறைதீர் கூட்டரங்கம், வங்கி, அஞ்சல் அலுவலகங்கள், காணொலிக் காட்சிக் கூட்டரங்கம் போன்ற பல்வேறு அலுவலகங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

இதைத் தொடர்ந்து, புதிய மாவட்டஆட்சியரகத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று(டிச. 26) திறந்து வைத்து பார்வையிட்டார்.