தமிழக மீனவர் (கோப்புப் படம்)
தமிழ் நாடு

17 இராமேசுவரம் மீனவர்களை விடுவிக்க வேண்டும்- தமிழக அரசு கடிதம்!

Staff Writer

இலங்கைக் கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள 17 இராமேசுவரம் மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க உரிய தூதரக நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளவேண்டும் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார்.

அதில், ”இராமேசுவரத்தைச் சேர்ந்த 17 மீனவர்கள் IND-TN-10-MM-206, IND-TN-10-MM-543 ஆகிய பதிவெண்கள் கொண்ட விசைப் படகுகளுடன் மீன்பிடிக்கச் சென்றிருந்தனர். கடலில் மீன்பிடியில் இருந்தபோது அவர்கள் இலங்கைக் கடற்படையினரால் 24.12.2024 அன்று சிறைப்பிடிக்கப்பட்டனர்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, 20.12.2024 அன்று இலங்கையைச் சேர்ந்த அடையாளம்தெரியாத ஆறு நபர்களால், நாகப்பட்டினம் மாவட்டம், கோடியக்கரை கிராமத்தைச் சேர்ந்த தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

அந்த மூர்க்கத்தனமான தாக்குதலில், இரண்டு நாட்டுப் படகுகளில் பயணித்த ஆறு மீனவர்களில், மூன்று மீனவர்கள் காயமடைந்துள்ளனர் என்றும், இந்தத் தாக்குதலின்போது, மீனவர்களின் மீன்பிடிப் படகுகளில் இருந்த ஜிபிஎஸ் கருவிகள், வி.எச்.எஃப். கருவிகள், மீன்பிடி வலை, கையடக்கத் தொலைபேசி, அவர்கள் பிடித்த மீன்களும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளனர் என்று முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதுபோன்று அடிக்கடி நடக்கும் கைது, தாக்குதல் சம்பவங்கள், பாரம்பரிய கடற்பரப்பில் மீன்பிடிக்கும் தொழிலை மட்டுமே நம்பியிருக்கும் மீனவர்களின் வாழ்க்கையில் நிச்சயமற்ற தன்மையையும், ஆபத்தையும் ஏற்படுத்துவதாக முதலமைச்சர் ஸ்டாலின் கவலையோடு குறிப்பிட்டுள்ளார்.

நடப்பு ஆண்டில் மட்டும் 530 மீனவர்கள் கைது செய்யப்பட்டு, 71 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அண்மைக் காலமாக நடைபெற்று வரும் இத்தகைய சம்பவங்களும், தாக்குதல்களும் மீன்பிடித் தொழிலை மட்டுமே நம்பி வாழும் மீனவ மக்களிடையே அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, இலங்கைக் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களின் மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்கவும் எதிர்காலத்தில் தமிழக மீனவர்கள் மீது இதுபோன்ற தாக்குதல்கள் நடைபெறாமல் இருக்கவும் உரிய தூதரக நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்று வெளியுறவுத் துறை அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் முதலமைச்சர் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram