செயின்ட் ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் உள்ள முதல்வர் அலுவலகத்தை நிர்வாக வசதிக்காக, நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10ஆவது தளத்தில் மாற்றத் திட்டமிட்டு, இதற்கானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்தப் பணிகளுக்காக தமிழக அரசின் பொதுப்பணித்துறை ரூ.5.54 கோடியில் டெண்டர் கோரியிருந்தது.
முதல்வரின் புதிய அலுவலகத்தை அமைக்கும் பணிகளுக்கான டெண்டர், ஆகஸ்ட் 13ஆம் தேதி நாளிதழ்களில் விளம்பரம் வெளியிடப்பட்டு, 4 நாள்கள் கழித்து ஆகஸ்ட் 17ஆம் தேதிதான் இணையதளத்தில் ஆவணங்கள் வெளியிடப்பட்டன.
மேலும், ரூ. 2 கோடிக்கு மேல் உள்ள டெண்டர்களை சமர்ப்பிக்க, 30 நாள்கள் அவகாசம் வழங்க வேண்டும் என்ற விதி இருக்கும் நிலையில், இதற்கு 15 நாள்கள் மட்டுமே அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.
பொதுவாக, டெண்டர் ஆவணங்களை இணையதளத்தில் வெளியிடும்போது மொத்த மதிப்பையும் வெளியிட வேண்டும். ஆனால், நாளிதழ்களில் ரூ.5. 54 கோடியாக டெண்டரின் மதிப்பு வெளியான நிலையில், இணையதளத்தில் வெளியான டெண்டரில் தொகை குறித்த விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.
இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு இன்று நடைபெற்று வரும் சட்டப்பேரவையில் தி.மு.க. உறுப்பினர் எ.வ.வேலு கேள்வி எழுப்பினார்.
இதற்கு தற்போது, டெண்டர் தொடர்பாக வெளிவரும் செய்திகள் தவறு என்றும், புதிய தலைமை அலுவலகப் பணிக்கான டெண்டர் இன்னும் முடிவடையவில்லை என்றும் பொதுப்பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா விளக்கமளித்துள்ளார்.