அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் வன்கொடுமை இழைக்கப்பட்டதில் அனைத்து குற்றவாளிகளும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் விடுத்துள்ள அறிக்கையில், “அண்ணா பல்கலைக் கழகத்தில் இரண்டாம் ஆண்டு பயின்று வரும் மாணவி பாலியல் வன்கொடுமை தாக்குதலுக்கு ஆளாகியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. பல்கலைக் கழக வளாகத்தில் பாதுகாப்பு பணியாளர்கள், கண்காணிப்பு கேமிராக்கள் போன்ற ஏற்பாடுகள் இருந்தும் பாலியல் வன்தாக்குதல், அதிலும் அவரோடு இருந்த சக மாணவரை தாக்கி கொடுங்காயங்கள் ஏற்படுத்தி விட்டு, மாணவியை இழுத்து சென்று, கூட்டு பாலியல் வன்தாக்குதலில் குற்றவாளிகள் ஈடுபட்டுள்ளனர் என்பது பல வினாக்களை எழுப்புகிறது.” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றாலும், இதில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டு, அவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பி விடாமல் தண்டிக்கப்படுவதை காவல்துறை உறுதி செய்ய வேண்டும், பல்கலைக்கழக வளாகப் பாதுகாப்புக் குறைபாடு குறித்து விசாரித்து, அதற்கு காரணமானவர்கள் மீதும் தமிழ்நாட்டு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்றும் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.