விஜய்யின் த.வெ.க. தலைமையில் புதிய கூட்டணி ஒன்று உருவாகியிருப்பதாக மாநிலங்களவைக்குப் போட்டியிடும் காங்கிரஸ் பிரமுகர் பிரவீன் சக்ரவர்த்தி கூறியிருப்பது அதிகப் பிரசங்கித்தனம் என்று சிபிஎம் கட்சி கண்டித்துள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் இதுகுறித்த விமர்சனத்தை தன் சமூக ஊடகப் பக்கங்களில் வெளியிட்டுள்ளார்.
அதில், “ புதிய கூட்டணியின் சார்பில் தான் மாநிலங்களவை வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருப்பதாகவும், அதில் சிபிஐ(எம்) பெயரையும் குறிப்பிட்டு இருப்பது தவறானது.
கூட்டணி அமைப்பது குறித்தோ, இந்த வேட்பாளருக்கு ஆதரவு கேட்டோ யாரும் எங்களை அணுகவோ, ஆலோசிக்கவோ இல்லை. தவெக ஆட்சி அமைக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதன் அடிப்படையில் ஆதரவு தெரிவித்துள்ளோம் என்பது ஏற்கனவே தெளிவாக கூறப்பட்டுள்ளது. பிரவீன் சக்கரவர்த்தி அவர்களின் பதிவை “அதிக பிரசங்கித்தனம்” என்று தான் சொல்ல வேண்டும்.” என்று சண்முகம் குறிப்பிட்டுள்ளார்.