சட்டப்பேரவையில் ஊரக வளர்ச்சி - ஊராட்சித் துறையின் அறிவிப்புகளை துறை அமைச்சர் ஆனந்த் நேற்று வெளியிட்டார்.
அந்த அறிவிப்புகளின் விவரம்:
1) ஊராட்சி ஒன்றிய சாலைகள், கிராம ஊராட்சி சாலைகள் ரூ. 1,634 கோடியில் மேம்படுத்தப்படும்.
2) ஊரகப் பகுதிகளில் நீர் வளத்தையும், பாசனத்திறனையும் மேம்படுத்த ரூ. 650 கோடியில் 10,000 புதிய குளங்கள் உருவாக்கப்படும்.
3) ஊரகப் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தி நீர்வள ஆதாரங்களை மேம்படுத்தும் வகையில் தடுப்பணைகள், நீர் செறிவூட்டும் குழிகள், நீர் செறிவூட்டும் ஆழ்துளைக் குழிகள், நிலத்தடி தடுப்பணைகள், பண்ணைக் குட்டைகள் உட்பட்ட 25,000 நீர்ப் பாதுகாப்புப் பணிகள் ரூ. 250 கோடி செலவில் மேற்கொள்ளப்படும்.
4) ரூ. 56 கோடியில் 500 ரேசன் கடை கட்டடங்கள் கட்டப்படும்.
5) அடிப்படை வசதிகள் முழுமையடையாத 3,000 குக்கிராமங்களில் ரூ. 300 கோடியில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படும்.
6) வேகமாக நகரமயமாகி வரும் நகர்ப்புறத்தை ஒட்டியுள்ள 1,200 ஊராட்சிகளில் ரூ. 1,000 கோடி செலவில் நவீன வசதிகள் ஏற்படுத்தப்படும்.
7) மலைசார்ந்த 277 ஊராட்சிகளில், நில அமைப்புக்கு ஏற்ற உள்கட்டமைப்பு பணிகள் ரூ. 100 கோடி செலவில் மேற்கொள்ளப்படும்.
8) எல்நினோ பருவநிலை மாற்றங்களைக் கருத்தில்கொண்டு, கால்நடைகளின் மேய்ச்சல் நிலங்களைப் பாதுகாக்க 1,000 ஏக்கர் மேய்ச்சல் நிலங்கள், தீவனப்பயிர் சாகுபடி - நீர் சேமிப்பு கட்டமைப்புடன் ரூ. 100 கோடி செலவில் மேம்படுத்தப்படும்.
9) நகரப் பகுதிகளுக்கு அருகில் உள்ள ஊராட்சிகள், 3000 மக்கள்தொகைக்கு மேல் உள்ள ஊராட்சிகளுக்கு தனி திடக்கழிவு மேலாண்மை இயக்கம் உருவாக்கப்படும்.
10) சிறப்பாகச் செயல்படும் கிராம ஊராட்சிகளை அங்கீகரிக்க 'தமிழ்நாடு வெற்றி கிராம விருதுகள்' வழங்கப்படும்.