தி.மு.க. எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் 
தமிழ் நாடு

தி.மு.க. எம்.எல்.ஏ.வுக்கு ஜாமின்... ஆனால், நிபந்தனை!

Staff Writer

முதலமைச்சர் விஜய்க்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசி சிறையில் அடைக்கப்பட்ட தி.மு.க. எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியுள்ளது.

ஒரு மாதத்துக்கு முன்னர் நடைபெற்ற தி.மு.க. பொதுக்கூட்டத்தில், முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாகப் பேசியதாக, தி.மு.க. எம்.எல்.ஏ. விளாத்திகுளம் மார்க்கண்டேயன் மீது தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

அதைத் தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவின்படி மார்க்கண்டேயன் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கில் அவர் ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை இன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியுள்ளது.

இதன்படி, தினமும் தூத்துக்குடி காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திடவும், மிரட்டல் விடுக்கும் வகையில் இனி பேச மாட்டேன் என்ற உத்தரவாதம் அளிக்கவும் வேண்டும்.

சட்டப்பேரவை கூடும் நாள்களில் மட்டும், தூத்துக்குடி காவல் நிலையத்தில் ஆஜராகத் தேவையில்லை என்றும் உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

முன்னதாக, இவரின் முன்ஜாமின் மனுவை தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றம், தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram