சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட முயற்சி செய்துகொண்டிருந்த தி.மு.க. ஒன்றியச் செயலாளர் மீது கத்திக்குத்துத் தாக்குதல் சம்பவம் அரங்கேறியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதியில் தற்போதைய உறுப்பினராக இருப்பவர் காந்திராஜன், சட்டப்பேரவை முன்னாள் துணைத்தலைவரான இவர், இந்த முறை போட்டியிட மாட்டார் என்று பேச்சு நிலவுகிறது.
இதையொட்டி, அடுத்த போட்டியாளர் என்பதில் வேடசந்தூர் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் வீரா சாமிநாதன் என்பவர் முனைப்பில் இருந்துவருகிறார். தொகுதி முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்திவருகிறார்.
தி.மு.க.வில் போட்டியிட விரும்புவோர் மனுத்தாக்கல் செய்யத் தொடங்கலாம் என அறிவிக்கப்பட்ட நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் இன்று மதுரைக்குப் பயணம்செய்துள்ள கட்டத்தில் இப்படியொரு சம்பவம் அரங்கேறியிருப்பது, அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சி அலைகளை உண்டாக்கியிருக்கிறது.