சென்னை பரந்தூர் விமான நிலையம் 
தமிழ் நாடு

பரந்தூர்- படுகுழியில் தள்ளிவிடும் முடிவு : மு.க.ஸ்டாலின்

Staff Writer

பரந்தூர் விமான நிலையத்தைக் கைவிடுவது தமிழ்நாட்டின் வளர்ச்சியைப் படுகுழியில் தள்ளிவிடும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக ஊடகப் பதிவு:

“ பரந்தூர் பன்னாட்டு விமான நிலையத் திட்டத்தைக் கைவிடுவதாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு மாநில வளர்ச்சியைப் பல ஆண்டுகள் பின்னுக்குத் தள்ளிவிடும். அற்ப அரசியல் காரணங்களுக்காகத் தமிழ்நாட்டின் நலனை அடகு வைக்கக்கூடாது.

மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பை விதி எண்.110-இன்கீழ் அறிவித்துவிட்டு விவாதத்துக்கோ கருத்து தெரிவிக்கவோ கூட இடமில்லாமல் செய்திருப்பது சரியல்ல.

மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதி, ஆட்டோமொபைல் என சகல துறைகளிலும் முதலிடம் வகிக்கும் தமிழ்நாட்டின் தலைநகரில் உலகத் தரத்திலான ஒரு விமான நிலையம் அமைவது மிக மிக அவசியமானது. அதை வேண்டாம் என மறுத்திருப்பது மாற்றமல்ல; பெருத்த ஏமாற்றம்!

சாத்தியமுள்ள அனைத்து மாற்று இடங்களையும் கவனமாகப் பரிசீலித்த பின்புதான் பரந்தூர் தேர்ந்தெடுக்கப்பட்டது. நிலம் கையகப்படுத்தலும் நிறைவடையும் தறுவாயில் உள்ளது. பலகட்டப் பணிகள், ஒப்புதல்கள் நிறைவடைந்த நிலையில் ஆட்சிக்கு வந்ததும் கட்டுமானம் விரைந்து தொடங்கப்பட பல திட்டங்களை நாங்கள் வைத்திருந்தோம். தற்போது அமைந்துள்ள புதிய அரசு மீண்டும் வேறு இடத்தைத் தேர்வு செய்து பணிகள் தொடங்குமுன், தமிழ்நாட்டின் வளர்ச்சியே மொத்தமாக விழுந்துவிடும்.

முதலீட்டாளர்களின் முதல் முகவரியாக திராவிட மாடல் ஆட்சியில் இருந்த தமிழ்நாடு கடைசி இடத்துக்குத் தள்ளப்படும். முதலமைச்சரின் அறிவிப்பு நம் போட்டி மாநிலங்களுக்கு அடித்த ஜாக்பாட்!

தொழில் வளர்ச்சி இல்லாமல் ஒரு ட்ரில்லியன் டாலர், ஒன்றரை டரில்லியன் டாலர் என்ற பொருளாதார வளர்ச்சி இலக்குகள் சாத்தியமே இல்லை. எந்த யோசனையும் ஆலோசனைகளும் இல்லாமல் த.வெ.க. அரசு எடுத்திருக்கும் இந்த முடிவு தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலைவாய்ப்புக் கனவுகளைத் தகர்க்கும் பேரிடி!” என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.