“தமிழ்நாடு தலைகுனியாது” எனும் தலைப்பில் 234 சட்டமன்றத் தொகுதிகளில் 20 நட்சத்திரப் பரப்புரையாளர்கள் பயணம் மேற்கொள்கின்றனர் என தி.மு.க. தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.
அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் 20.01.2026 நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், “தமிழ்நாடு தலைகுனியாது” என்ற இந்தப் பரப்புரை பிப்ரவரி மாதம் தொடங்கப்பட உள்ளது.
இந்தப் பரப்புரையின் கீழ், ஸ்டாலினால் தேர்ந்தெடுக்கப்பட்ட 20 நட்சத்திரப் பரப்புரையாளர்கள், தமிழகத்திலுள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும், பிப்ரவரி மாதம் முழுவதும் தீவிரமான பரப்புரைப் பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார்கள்.
இந்தப் பரப்புரையின்போது, ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும், ஒரு பொதுக் கூட்டம் நடத்திட வேண்டும் என்று தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார்.
மேலும், ”ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியில் உள்ள முக்கிய பிரமுகர்கள், இளைஞர்கள் / மாணவர்கள், தன்னார்வ அமைப்புகள், தொழிற்சங்கங்கள், தொழில் முனைவோர், கல்வியாளர்கள் உள்ளிட்டோரை ஒரே இடத்தில் அழைத்து, மண்டலப் பொறுப்பாளர்கள், மாவட்டச் செயலாளர்கள் / பொறுப்பாளர்கள் மற்றும் நட்சத்திரப் பரப்புரையாளர்கள் அரசின் சாதனைகளை எடுத்துக்கூறியும், கலந்துகொள்வோரின் எதிர்பார்ப்புகள், கோரிக்கைகள் குறித்தும் கலந்துரையாடல் மேற்கொள்ள வேண்டும்.
தமிழ்நாடு தலைகுனியாது” பரப்புரையை வெற்றியடையச் செய்திடும் வகையில் பரப்புரை குறித்து தக்க விளம்பரங்களைச் செய்திடவும், தொகுதிகளில் தேவையான ஏற்பாடுகளை மண்டலப் பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் / பொறுப்பாளர்கள் செய்யவேண்டும்.” என்றும் துரைமுருகன் கேட்டுக்கொண்டுள்ளார்.