எடப்பாடி பழனிசாமி 
தமிழ் நாடு

கோயிலில் நடந்த இரட்டைக் கொலை: இபிஎஸ் கண்டனம்!

Staff Writer

ராஜபாளையம் அருகே நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயிலில் இரவுக் காவலர்கள் இருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் மற்றும் சென்னை பெண் கவுன்சிலர் அலுவலகம் மீது நாட்டு வெடிகுண்டு வீசித் தாக்குதல் நடத்தப்பட்டதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட எக்ஸ் பதிவில், “விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயிலில் இரவுக் காவலர்கள் இருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டு, அவர்களின் உடல்கள் கோயில் கொடிமரத்தில் கிடந்ததாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

அதேபோல், சென்னை மாநகராட்சி 196-வது வார்டு பெண் கவுன்சிலர் அஸ்வினி கருணா அலுவலகம் மீது நாட்டு வெடிகுண்டு வீசித் தாக்குதல் நடந்திருப்பதும் பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. கோயில் முதல் காவலர் குடியிருப்பு வரை எங்குமே பாதுகாப்பற்ற சூழல் இருக்க. தமிழகத்தில் ஆட்சி என ஒன்று எதற்கு தான் இருக்கிறது?

பட்டாக்கத்தி, அரிவாளில் தொடங்கி, துப்பாக்கி, வெடிகுண்டு என தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கை பாதாளத்துக்கு கொண்டு சென்றதற்கு பொம்மை முதல்வரே முழு பொறுப்பு. ஆளத் தெரியாமல், ஒருசில அதிகாரிகளின் கைப்பாவையாகி, காவல்துறையை சுதந்திரமாக செயல்படவிடாமல் முடக்கி, மக்கள் உயிரோடு விளையாடிக் கொண்டிருக்கும் பொம்மை முதல்வர் தலைமையிலான பெயிலியர் மாடல் அரசுக்கு எனது கடும் கண்டனம்.

கோயில் கொலையில் தொடர்புடைய கொலையாளிகள் மற்றும் அதிமுக கவுன்சிலர் அலுவலகத்தில் வெடிகுண்டு வீசித் தாக்கிய குற்றவாளிகள் மீதும் கடும் சட்ட நடவடிக்கை எடுக்க திமுக மாடல் அரசை வலியுறுத்துகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.