பெரியார் 
தமிழ் நாடு

பெரியார் அறக்கட்டளையை அழிக்கச் சதி- கி.வீரமணி

Staff Writer

பெரியார், மணியம்மையாரைத் தொடர்ந்து திராவிடர் கழகத்தின் தலைமைப் பொறுப்பை கி.வீரமணி ஏற்று 49 ஆம் ஆண்டு இன்று தொடங்குகிறது. இதை முன்னிட்டு அவர் மலரும் நினைவுகளாக பல்வேறு சம்பவங்களை நினைவுகூர்ந்துள்ளார்.

” பெரியர், மணியம்மையார் காலத்தில், தி.க.வினாலும் அய்யாவினாலும் விளம்பரமும், பதவிப் பொறுப்புகளும் பெற்றவர்கள் சிலரால், வருமான வரித்துறை ஆயுதம் திட்டமிட்டே ஏவப்பட்து. ‘தந்தை பெரியார் இருக்கும்வரை தீவிர நடவடிக்கை எடுக்கவேண்டும், அவரது முடிவுக்குப் பின்னால் எல்லாம் முடிந்துவிடும்’ என்ற திட்டத்துடன் இயங்கி, அய்யா காலத்தில், அய்யா தொடங்கிய பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தை அறக்கட்டளையாக அங்கீகரிக்க மறுத்ததோடு, 15 லட்சம் ரூபாய் அபராதம் என்றெல்லாம் போட்டு, அன்னையார் தலைமைப் பொறுப்புக்கு வந்த பின், ரூ.60 லட்சத்திற்கு வரி மேல் வரி போட்டு, அன்னையாருக்குப் பிறகு நான் பொறுப்பேற்ற (1978) காலகட்டத்தில், ரூ.80 லட்சம்வரை வரி என்று சொல்லி, நிறுவனத்தையே அழிக்கப் பெரு முயற்சிகள் – வழக்குக்குமேல் வழக்குகள் எல்லாம் வந்தபோதும், தக்க வகையில், தக்க சட்ட வல்லுநர்களின் ஆலோசனைகள், மூத்த வழக்குரைஞர் வாதுரைகள் மூலம் வென்று, 80 லட்சம் ரூபாய் வரியைத் தள்ளுபடி செய்ய வைத்தோம். இது சட்டப்படி ஓர் அறக்கட்டளையே என்ற அங்கீகாரம் பெற்று, முக்கியமான முதல் களத்தில் வென்று, நமது இயக்கம் வெறும் மணல் குவியல் அல்ல; கற்பாறை என்பதை, கொள்கை எதிரிகளும் விளங்கும்படிச் செய்தோம்.

இது ஒரு தனி மனிதச் சாதனை அல்ல; பல்வேறு சட்ட அறிஞர்களின் ஆலோசனை, அறிவுரைகள்மூலம் கிடைத்த ‘‘மெகா பரிசு!’’ என்று கி.வீரமணி குறிப்பிட்டுள்ளார்.