சட்டப்பேரவையில் பேசிய திருத்துறைப்பூண்டி தொகுதியின் உறுப்பினர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் க. மாரிமுத்து, ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணியை பொறியியல் படித்த மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதுகுறித்து அவர் பேசியதாவது:
"ஸ்மார்ட் மீட்டர் பொருத்த வேண்டும் என்று ஒன்றிய அரசு, மாநில அரசையும், மின் வாரியத்தையும் நிர்பந்திக்கிறது. அதைப் பொருத்துவதற்கு ரூ. 475 கோடி செலவாகும். ஆனால், மாநில அரசு ஒதுக்கியிருக்கும் நிதி வெறும் ரூ. 12 கோடி மட்டுமே.
இந்த ஆட்சி இளைஞர்களின் பேராதரவால் வந்த ஆட்சி. இலட்சக்கணக்கான பொறியியல் துறை பயின்ற மாணவர்கள் அன்றாடம் பல்கலைக்கழகங்களிலிருந்து வெளியேறுகிறார்கள்.
அந்த ஸ்மார்ட் மீட்டர் தயாரிக்கும் பணியை இந்தத் துறையில் பயின்ற மாணவர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில்கூட தேர்வு செய்து, நேரடியாகப் பணியில் அமர்த்தினால் ரூ. 175 கோடி மட்டுமே செலவாகும். மீதமுள்ள பணம் மின்வாரியத்திற்கு சேமிப்புதான்." என்று க. மாரிமுத்து கூறினார்.