எடப்பாடி பழனிசாமி 
தமிழ் நாடு

மாணவி வன்கொடுமைக் கொலை- கனிமொழி குறித்து எடப்பாடி விமர்சனம்

Staff Writer

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் வேடநத்தம் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை - கொலை நாட்டையே உலுக்கியுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைப் பார்க்கச் சென்ற தி.மு.க. மக்களவைத் தொகுதி உறுப்பினரை மக்கள் விரட்டியடித்தார்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம் செய்துள்ளார்.

”பாதிக்கப்பட்டு உயிரிழந்த அச்சிறுமியின் குரலாக நீதிகேட்டு பாராளுமன்றம் முதல் நீதிமன்றம் வரை ஒலித்து வருகிறது அஇஅதிமுக.

களத்தில் உறவினர்கள் - ஊர்மக்கள் போராட்டமும் வலுப்பெற்று வருகிறது. திமுக அரசின் சாக்கு போக்குகளை நம்பத் தயாராக இல்லை என்பதற்கு, பொம்மை முதல்வரின் தங்கையும், திமுக துணைப் பொதுச்செயலாளருமான கனிமொழி அவர்களை மக்கள் விரட்டி அனுப்பியதே சாட்சி!

இவ்வளவு கொடூரமான வழக்கில் குற்றவாளியைக் கண்டறிய முடியவில்லை என்பது எவ்வளவு பெரிய கேவலம் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களே?

காவல்துறை சிஸ்டத்தை நீங்கள் எந்த அளவிற்கு சீரழித்து உள்ளீர்கள் என்பது இப்போதாவது உங்களுக்குப் புரிகிறதா?

இது இத்தோடு நிற்கப் போவது இல்லை. வரும் 17.03.2026 (செவ்வாய்க்கிழமை) அன்று தமிழகப் பெண்களின் பாதுகாப்பை நிர்கதியாக்கிய உங்கள் அரசுக்கு முடிவுரை கட்டப் போகும் மாபெரும் போராட்டத்தின் மூலம் வருவாய் மாவட்ட வாரியாக மக்கள் மன்றத்தில் களம் காண உள்ளது அஇஅதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி.” என்று எடப்பாடி பழனிசாமி தன் சமூக ஊடகப் பதிவில் கூறியுள்ளார்.