பா.ம.க. நிறுவனர் இராமதாசின் தரப்பைச் சேர்ந்த சேலம் அருள், இன்று தன் ஆதரவாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.
அங்கு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, இராமதாசும் அன்புமணியும் இணைந்ததைப் பற்றி அவரிடம் கேட்டதற்கு, "இந்த இணைப்பு நடந்ததில் மட்டற்ற மகிழ்ச்சி.” என்றார்.
”இது ஒன்றரை வருடங்களுக்கு முன்னரே நடந்திருந்தால், இன்று கட்சிக்கு அங்கீகாரம் கிடைத்திருக்கும்; துணை முதல்வர் ஆகியிருப்போம். இன்னும் 10-15 எம்.எல்.ஏ.களைப் பெற்றிருப்போம். நாங்கள் பெற்றிருந்த 5.8 சதவீத வாக்கு சதவீதம் என்பது 2 சதவீதமாகக் குறைந்திருக்காது.” என்று ஆதங்கத்துடன் கூறினார்.
அடுத்த கட்ட முடிவு என்ன எனக் கேட்டதற்கு, “அது மட்டுமில்லாமல் என்னைப் போன்ற ஆட்களெல்லாம் பல கோடி கடன்காரனாக ஆகியிருக்க மாட்டோம். என்னைக் கொலை செய்ய முயன்றிருக்க மாட்டார்கள். இராமதாஸ் ஐயா எங்களை நட்டாற்றில் விட்டதைப்போல அச்சம்... இந்த மாதிரி பல விஷயங்கள் உள்ளன." என்றும் கூறிவிட்டு, பேட்டியை முடித்துக்கொண்டார்.
இரண்டு நாள்களுக்குள் தன் முடிவைத் தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.