தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் டி.என்.பி.எஸ்.சி.  
தமிழ் நாடு

தேர்வு மைய குளறுபடி: தமிழ்நாடு முழுவதும் குரூப்2, குரூப்2ஏ தேர்வு ரத்து!

Staff Writer

தமிழ்நாடு முழுவதும் இன்று நடக்க இருந்த குரூப்2, குரூப் 2ஏ தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. தேர்வு மையம் ஒதுக்குவதில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக கடைசி நேரத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளடு.

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், தனிப்பிரிவு உதவியாளர், வனவர் மற்றும் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 2, குரூப் 2ஏ அறிவிப்பை கடந்த ஆண்டு ஜூலை மாதம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. இதற்கான முதல்நிலைத் தேர்வு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்றது.

இதற்கான தேர்வு முடிவுகள் கடந்த டிசம்பர் மாதம் வெளியானது. அதில் குரூப்-2 பதவிகளுக்கு 1,126 பேரும், குரூப் 2ஏ பதவிகளில் 9 ஆயிரம் 457 பேரும் தகுதி பெற்றனர். அதனைத் தொடர்ந்து தகுதி பெற்ற தேர்வர்களுக்கு முதன்மைத் தேர்வு இன்று ( பிப்.8) நடைபெற இருந்தது. அதன்படி காலையில் குரூப் 2ஏ பதவிகளுக்கான முதன்மைத் தேர்வும், பிற்பகலில் குரூப்2 மற்றும் 2ஏ பதவிகளுக்கான தமிழ்த் தகுதித்தாள் தேர்வும் நடைபெற இருந்தது.

இந்நிலையில் சென்னைஅரும்பாக்கத்தில் உள்ள கல்லூரி அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தில் தேர்வர்களுக்கான பதிவு எண்கள் இல்லாததால் குழப்பம் ஏற்பட்டது. மேலும் நந்தனம் அரசு கலைக் கல்லூரிதேர்வு மையத்தில் காலை 9 மணியை கடந்தும் வினாத்தாள் வரவில்லை என புகார் எழுந்தது. இதனையடுத்து தேர்வெழுத அனுமதிக்கப்படாததால் தேர்வர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் குருப் 2, குரூப் 2ஏ தேர்வுகள் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரத்து செய்யப்படுவதாகவும் வேறு தேதி பின்னர் அறிக்கப்படும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.