ஆவின் நிறுவனத்தின் பச்சை நிற பாக்கட் பாலின் விற்பனையை நிறுத்த முயல்வதாக அரசியல் தலைவர்கள் அன்புமணி, அண்ணாமலை ஆகியோர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
ஆனால், அது தவறான தகவல் என அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
”ஆவின் நிறுவனத்தின் பச்சை நிற பால் வகையான கிரீன் மேஜிக் பாலின் விநியோகம் நிறுத்தப்பட்டதாகவோ அல்லது கணிசமாகக் குறைக்கப்பட்டதாகவோ சில ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை.
ஆவின் நிறுவனம் தனது அனைத்து பால் வகைகளையும், அதில் கிரீன் மேஜிக் பாலும் உட்பட, தொடர்ந்து வழக்கம்போல் விநியோகம் செய்து வருகிறது என்பதை இதன் மூலம் தெளிவுபடுத்தப்படுகிறது. எந்தவொரு பால் வகையின் விநியோகமும் நிறுத்தப்படவோ அல்லது கணிசமாகக் குறைக்கப்படவோ இல்லை. நுகர்வோர்களின் தேவைகளுக்கு ஏற்ப பால் தொடர்ந்து விநியோகிக்கப்பட்டு வருகிறது.
எனவே, பொதுமக்களும் நுகர்வோரும் இதுபோன்ற தவறான செய்திகளை நம்பி குழப்பமடைய வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது. ஆவின் கிரீன் மேஜிக் பால் வழக்கம்போல எந்தவித தடங்கலும் இன்றி தொடர்ந்து விநியோகம் செய்யப்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.” என்று அரசுச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.