மலைப்பிரதேசங்களில் விளையும் ஆப்பிள் போன்ற பழங்களை சமவெளியில் வளர்த்து முன்னோடியாகத் திகழ்கிறார், ஒசூரை அடுத்த தளி பகுதியில் விவசாயி லட்சுமி நாராயணா.
ஆப்பிள் மட்டுமின்றி ஆரஞ்சு, அவகாடாே, டிராகன் புரூட், புளூபெரி, அத்தி, விதையில்லா எலுமிச்சை உட்பட்ட 20-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு, குளிர்ப் பிரதேச பழங்களை சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்து வருகிறார்.
இவர் இந்தச் சாகுபடிக்கு பாரம்பரிய முறைக்குப் பதிலாக சொட்டுநீர்ப் பாசன வசதியைப் பயன்படுத்துகிறார். மேலும், மின்சாரத்திற்கு சோலார் மின்சாரத்தைப் பயன்படுத்தி வருகிறார். குறைந்த செலவில் அதிக வருமானத்தை ஈட்டி வருகிறார்.
சோதனை முயற்சியாக நடப்பட்ட ஆப்பிள் மரங்கள், புளூபெரி செடிகள் 1.5 ஆண்டுகளில் அறுவடைக்குத் தயாராக உள்ளன. 9 மாதங்களிலேயே பலன் தரும் ஆரஞ்சு மரங்களும், அதிக சாறு நிறைந்த ஹைபிரிட் எலுமிச்சையும் நல்ல லாபத்தைத் தந்து வருகின்றன. 3 மாதங்களிலேயே பலன் தரும் கொய்யா, அத்திப்பழம், பட்டர் புரூட் ஆகியவையும் பயிரிட்டு வருகிறார்.
முறையான பராமரிப்பு, வழிகாட்டுதல், நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் விவசாயம் செய்தால், பல்வேறு சாதனைகளை புரியலாம். அதிக லாபம் தரும் இதுபோன்ற மலைப்பிரதேசப் பழங்களை சமவெளியில் பயிரிட அனைத்து விவசாயிகளையும் ஊக்குவிக்க வேண்டும் என்று லட்சுமி நாராயணா வலியுறுத்துகிறார்.