சவுதியிலிருந்து மும்பை துறைமுகம் வந்தடைந்த கப்பல் 
தமிழ் நாடு

ஈரான் கண்ணில் மண்ணை தூவி இந்தியாவுக்கு வந்த கப்பல்!

Staff Writer

சவுதி அரேபியாவில் இருந்து ஈரானிய தாக்குதல்களில் தப்பித்து, ஹார்மூஸ் நீரிணையை பாதுகாப்பாகக கடந்து எண்ணெய் கப்பல் ஒன்று மும்பை துறைமுகத்துக்கு வந்துள்ளது.

ஈரான் மீது அமெரிக்கா - இஸ்ரேல் இணைந்து தொடுத்துள்ள போர் தீவிரமடைந்து வருகிறது. இதனால் உலகளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, எரிவாயு தட்டுப்பாடு சூழல் ஏற்பட்டுள்ளது. உலக நாடுகளுக்கு கச்சா எண்ணெய் போக்குவரத்துக்கு முக்கிய வழித்தடமாக விளங்கும் ஹார்மூஸ் ஜலசந்தியை கடந்து ஒரு லிட்டர் எண்ணெய் கூட வெளியேறாது என ஈரான் எச்சரிக்கை விடுத்து இருந்தது.

இந்நிலையில், இந்தியக் கொடி ஏந்திய கப்பல்களை ஹார்மூஸ் ஜலசந்தி வழியாக செல்ல ஈரான் அனுமதி அளித்ததாக தகவல் வெளியானது. இதற்கு ஈரான் மறுப்பு தெரிவித்துள்ளது. இந்திய தரப்பில் கூறப்பட்டத் தகவலை ஈரான் மறுத்துள்ளதாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதனிடையே, சவுதி அரேபியாவில் இருந்து ஈரானிய தாக்குதல்களில் தப்பித்து, ஹார்மூஸ் ஜலசந்தியை பாதுகாப்பாக கடந்து, எண்ணெய் கப்பல் ஒன்று மும்பை துறைமுகம் வந்தடைந்தது.

மார்ச் 8 அன்று நீரிணையை கடக்கும்போது, தாக்குதலில் இருந்து தப்பிக்கத் தனது இருப்பிடத்தைக் காட்டும் சமிக்ஞைகளை (AIS) அணைத்துப் பயணித்துள்ளது. லைபீரியா கொடியுடன் வந்த இந்தக் கப்பல், 1.35 லட்சம் மெட்ரிக் டன் எண்ணெயைச் சுமந்து வந்துள்ளது.