ஏற்காடு பண்பலை வானொலியில் வேளாண்மை, காலநிலை சார்ந்த உள்ளூர் நிகழ்ச்சிகளை ஒலிபரப்ப வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட சமூக ஊடகப் பதிவு:
"சேலம் மாவட்டம் ஏற்காட்டில் உள்ள பண்பலை வானொலி நிலையம் தரம் உயர்த்தப்பட்டு, கடந்த மார்ச் ஒன்றாம் தேதி பயன்பாட்டிற்கு வந்த நிலையில், அதில் இன்னும் உள்ளூர் தயாரிப்பு நிகழ்ச்சிகள் ஒலிபரப்பபடவில்லை.
மாறாக, தேசிய அளவிலும், மாநில அளவிலும் தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சிகள் மட்டுமே ரிலே ஒலிபரப்பாக செய்யப்படுகின்றன.
பண்பலை வானொலிகளின் நோக்கம் சமூகத்திற்கு தேவையான தகவல்களை வழங்குவது தான்.
ஏற்காடு தமிழ்நாட்டின் முக்கியமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். அங்கு நிலவும் காலநிலை, போக்குவரத்து நெரிசல், சுற்றுலாப் பயணிகள் உட்பட்ட விவரங்கள் பண்பலை வானொலி மூலம் தெரிவிக்கப்பட்டால், அது அங்கு சுற்றுலா செல்ல விரும்புபவர்களுக்கு வசதியாக இருக்கும்.
எனவே, ஏற்காடு பண்பலை வானொலி மூலம் ஒரு நாளைக்கு குறைந்தது 10 மணி நேரமாவது உள்ளூர் தயாரிப்பு நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்படுவதை பிரசார் பாரதி அமைப்பு உறுதி செய்ய வேண்டும்.
சேலம், அதன் சுற்றுப்புற மாவட்டங்களின் கல்வி, வேளாண்மை, கால்நடை வளர்ப்பு, சுற்றுலா சார்ந்த தகவல்களையும், கலை, இலக்கியச் செழுமையையும் மக்களுக்கு கொண்டு செல்லும் வகையிலான நிகழ்ச்சிகளை தயாரித்து ஒலிபரப்ப ஏற்பாடு செய்ய வேண்டும்." என்று அன்புமணி கூறியுள்ளார்.