சட்டப்பேரவையில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி பேசியபோது, ஆளுநர் உரையில் கோயில் சொத்துகளின் புனித நோக்கத்துக்காக மட்டும் பயன்படுத்தப்படும் எனக் குறிப்பிட்டுள்ளதைப் பற்றி கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளிக்கும்வகையில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ், கடந்த ஆட்சியில் கோயில் சொத்துகளை வணிகமயமாக ஆக்கினார்கள்; அதைத் தொடர விடமாட்டோம் என்று வரிசையாகப் பட்டியலிட்டுப் பேசினார்.
குன்னூரில் 50 கோயில்களில் பக்தர்களுக்கு கழிப்பிட வசதிகூடச் செய்துதராமல் மல்டிலெவல் கார் பார்க்கிங் வசதியைச் செய்ய 10 கோடி ரூபாயை ஒதுக்கினார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதற்கு தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் சேகர்பாபு எழுந்து, குன்னூர் பகுதியில் 56 கோயில்களை தான் நேரில் ஆய்வுசெய்ததாகவும் அங்கு வந்த பக்தர்களின் வசதிக்காகவே பார்க்கிங் வசதி திட்டமிடப்பட்டது என்றும் அதன்மூலம் கிடைக்கும் வருவாயில் கோயில் மேம்பாட்டுப் பணிகளைச் செய்யலாம் என்றும் கூறினார்.
பதில்கூறிய அமைச்சர் ரமேஷ், பக்தர்கள் கேட்பது கழிப்பிடம் போன்ற அடிப்படை வசதிகளைத்தான்; அதைச் செய்யாமல் பார்க்கிங் செய்வது தேவையில்லை; நகராட்சி சார்பில் பார்க்கிங்குக்காக நிலத்தை மட்டும் கொடுத்திருக்கலாம்; அதன்மூலம் கிடைக்கும் நிதியைக் கொண்டு வசதிகள் செய்துகொடுக்கலாம்; பக்தர்கள் 10 கோடி ரூபாயைக் கேட்கவில்லை என்று விளக்கம் அளித்தார்.