கோவையில் சட்டவிரோதமாக தூப்பாக்கி வைத்திருந்தவர்கள் கைது 
தமிழ் நாடு

பிகாரில் இருந்து வாங்கி வரப்பட்ட துப்பாக்கி: கோவையில் 3 பேர் கைது!

Staff Writer

பிகாரில் இருந்து சட்ட விரோதமாக நாட்டு துப்பாக்கியை வாங்கி, கோவையில் விற்பனை செய்தது தொடர்பாக மூன்று பேரை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிகாரில் இருந்து நாட்டுத் துப்பாக்கி வாங்கி வந்து கோவையில் விற்பனை செய்வதாக தீவிரவாத நடவடிக்கைகள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை கண்காணித்து வந்த போலீசார், கோவை சேரன் மாநகரை சேர்ந்த மணிகண்டன், காளப்பட்டியைச் சேர்ந்த ஹரிஸ்ரீயை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து துப்பாக்கியும், 6 தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

இவர்களுக்கு துப்பாக்கி விற்பனை செய்த பிகாரைச் சேர்ந்த குந்தன் ராய் என்ற வாலிபரும் கைது செய்யப்பட்டார். இவர்கள் எதற்காக துப்பாக்கி வாங்கினர், கூலிப்படையாக செயல்படும் கும்பலா, இதற்கு முன் நடந்த குற்ற சம்பவங்களில் இவர்களுக்குத் தொடர்பு உள்ளதா என்பதை பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கு முன் வேறு யார் யாருக்கு துப்பாக்கி விற்பனை செய்யப்பட்டுள்ளது என்பது பற்றியும் விசாரணை நடக்கிறது.