அண்மையில் த.வெ.க.வில் சேர்ந்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான குட்கா வழக்கை, 12 வாரங்களுக்குள் விசாரித்து முடிக்க உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
அ.தி.மு.க. ஆட்சியின்போது அப்போதைய அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ரமணா உட்பட பலர் மீது சட்டவிரோத குட்கா விற்பனை தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டது. அது குறித்து வழக்கும் பதியப்பட்டு அது விசாரணையில் இருந்துவருகிறது.
அத்துடன் அமலாக்கத் துறையும் இதில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் செய்யப்பட்டதாக தனியாக வழக்கு பதிந்து தேடுதல் சோதனைகளையும் மேற்கொண்டது.
கடந்த தி.மு.க. ஆட்சியில் இந்த வழக்கு விசாரணை மந்தகதியில் இருந்துவந்தது.
புதிய அரசு அமைந்தவுடன் இதில் விசாரணை விரைவுபடுத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விஜயபாஸ்கர் ஆளும் த.வெ.க.வில் பெரும் கூட்டத்துடன் இணைந்தார்.
இப்படியான பின்னணியில் உயர்நீதிமன்றம், இன்று பிறப்பித்த ஆணையில், விஜயபாஸ்கர் வழக்கை விசாரிக்கும் எம்.எல்.ஏ., எம்.பி. சிறப்பு நீதிமன்றம் இதை 12 வாரங்களுக்குள் விசாரித்து முடிக்க உத்தரவிட்டுள்ளது.