உயரமாகும் சாலைகள், பள்ளமாகும் வீடுகள் 
தமிழ் நாடு

உயரும் சாலைகள் ... பள்ளத்தில் மூழ்கும் வீடுகள் - ஆய்வில் அதிர்ச்சி!

Staff Writer

தமிழ்நாடு முழுவதும் சாலை உயரம் அதிகரிப்பதால் பொதுமக்களுக்கு ஏற்படும் இன்னல்கள் குறித்து மக்கள் தணிக்கை மூலம் அறப்போர் இயக்கம் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

”நடப்பு ஆண்டின், கடந்த ஜூன் 29ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் சாலை உயரம் அதிகரிப்பால் ஏற்படும் இன்னல்கள் குறித்து அந்தந்த பகுதியில் வசிக்கும் மக்கள் கண்டறிந்து அதன் விவரங்களை அறப்போர் இயக்கத்திற்கு கடந்த 6 வார காலமாக அனுப்பி வருகின்றனர்.

தமிழ்நாடு முழுவதிலும் இருந்து 157 ஆர்வலர்கள் அவரவர் பகுதியில் உள்ள சாலை உயரம் அதிகரித்த பகுதிகளை கண்டறிந்ததில், ஒட்டு மொத்தமாக 245 பகுதிகளில் சாலை உயரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

புதிய சாலை போடும்போது பழைய சாலையைச் சுரண்டி எடுக்க வேண்டும் என்ற விதியை ஒப்பந்ததாரர்கள் தொடர்ந்து மீறுவதே இந்தப் பிரச்சினைக்கான முக்கியக் காரணமாக உள்ளது.” என்றும்,

”இதனால், ஒவ்வொரு முறையும் புதியதாக தார் சாலை அமைக்கும் பொது சாலையின் உயரம் கூடிக்கொண்டே போய், வீடுகள் சாலை உயரத்தை விடப் பள்ளமாகிவிடுகின்றன.”என்றும் அறப்போர் இயக்கம் கூறியுள்ளது.

உதாரணமாக சென்னை முகலிவாக்கம் பகுதியில் வீடுகள் சாலையின் உயரத்தை விட 2 அடிகளுக்கு மேல் கீழே சென்றுள்ளதை காணமுடிகிறது. இதனால் அப்பகுதி மக்கள் மழை காலங்களில் வீடுகளுக்குள் மழை, சாக்கடை நீர் உட்புகுவதால் அதிக சிரமத்திற்கு உள்ளாகினறனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

”சாலை உயரம் அதிகரிப்பால் பொதுமக்களுக்கு ஏற்படும் இன்னல்கள்:

1) வீட்டுக்குள் புகும் மழைநீர்: சாலைகள் மேடாகிவிட்டதால், மழை பெய்தால் சாலைகளில் ஓடும் தண்ணீரும் சாக்கடை நீரும் நேரடியாகப் பள்ளத்தில் உள்ள வீடுகளுக்குள் புகுந்துவிடுகிறது.

2) சாலையில் இருந்து வீட்டிற்கு அணுகும் தன்மை: முன்பு படியேறி வீட்டிற்குள் சென்ற நிலை மாறி, இப்போது ரோட்டிலிருந்து பள்ளத்தில் இறங்கி வீட்டிற்குள் செல்ல வேண்டியுள்ளது. இதனால் முதியோர்களும், சக்கர நாற்காலி பயன்படுத்தும் மாற்றுத்திறனாளிகளும் தினசரி வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர்.

3) விபத்து அபாயம்: சாலைகள் மட்டும் உயர்த்துவதால், பாதாள சாக்கடை மூடிகள் பள்ளமாகி ரோட்டின் நடுவே குழிகள் போல மாறிவிடுகின்றன. இதில் சிக்கி இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றனர்.

4) பொருளாதார இழப்பு: வீடுகளுக்குள் தண்ணீர் புகுவதைத் தடுக்க, மக்கள் தங்கள் வீட்டின் தரைத்தளத்தை உயர்த்த பல லட்ச ரூபாய் (ரூ. 40 லட்சம் வரை) செலவு செய்ய வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.

5) அதிகாரிகளின் அலட்சியமும் முறைகேடும்: மக்களின் வீடுகள் பாழாவது மட்டுமின்றி, உயர்ந்த சாலைக்கு ஏற்ப மீண்டும் நடைபாதைகள், பாதாள சாக்கடை மூடிகள், மின்சாரப் பெட்டிகள் போன்றவற்றை உயர்த்துவதற்காக அரசு மீண்டும் அதற்காக ஒப்பந்தங்களை கோருகிறது. இதனால் மக்களின் வரிப்பணம் மிகுந்த அளவில் வீணாகுகிறது.

அறப்போர் இயக்கத்தின் முக்கியப் பரிந்துரைகள்:

1) பழைய சாலையை தோண்டுவது கட்டாயம்: டெண்டர் ஆவணத்தில் சாலை தோண்டப்படும் ஆழத்திற்கே போடப்படும் அளவும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். பழைய சாலையைத் தோண்டி எடுத்த பிறகே புதிய சாலை போட வேண்டும். சாலையின் உயரம் பழைய அளவிலேயே இருப்பதை முழுமையாக உறுதி செய்யப்பட வேண்டும்.

2) உயரக் கண்காணிப்பு: சாலை போடுவதற்கு முன்பாக அந்த சாலையின் தற்போதைய உயரத்தை தெளிவாக காட்டும் வகையில் குறியீட்டு கல் வைக்க வேண்டும். சாலை போடுவதற்கு முன்பும் பின்பும் சாலையின் உயரத்தை (கடல் மட்டத்திலிருந்து) அளந்து இணையதளத்தில் வெளிப்படையாகப் பதிவு செய்ய வேண்டும். ஒருவேளை உயரம் கூடியிருந்தால் ஒப்பந்ததாரருக்குப் பணப்பட்டுவாடா செய்யக் கூடாது.

3) ஆதாரங்கள் கட்டாயம்: பழைய சாலையைத் தோண்டுவது, கடல் மட்டத்தில் இருந்து சாலையின் உயர அளவீட்டை புகைப்படம், வீடியோ ஆதாரங்களைச் சமர்ப்பிப்பதை அனைத்து ஒப்பந்தங்களுக்கும் கட்டாயமாக்க வேண்டும்.

4) மக்களுக்கு இழப்பீடு: இனிமேல் முறைகேடாகச் சாலை போடப்பட்டு எந்தவொரு வீடாவது பள்ளத்திற்குள் சென்றால், அந்த வீட்டு உரிமையாளருக்கு அரசு 40 லட்சம் ரூபாய் வரை இழப்பீடு வழங்க வேண்டும்.

5) நிரந்தரத் தீர்வு: ஏற்கனவே பள்ளமாகிப் போன வீடுகளுக்குத் தீர்வு காணவும், பிரதான சாலைகளின் உயரத்தைப் படிப்படியாகக் குறைக்கவும் அரசு ஒரு நிபுணர் குழுவை அமைக்க வேண்டும்.

மக்களின் இன்னல், பொருளாதார இழப்பு, பருவ மழை காலங்களில் ஏற்படும் வேதனையை அரசு உணர்ந்து உடனடியாக செயல்படுவது மிக அவசியம்.” என்று அறப்போர் இயக்கத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram