நீட் தேர்வை ரத்துசெய்யக் கோரி சென்னையில் சமூக ஆர்வலர்கள் நடத்தி வந்த காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் 12ஆவது நாளான நேற்றுடன் முடிவுக்கு வந்தது.
சமூக ஆர்வலர்களான தனசேகர், ஜீவா, மோகன், ரவி ஆகிய 4 பேர், கடந்த ஆகஸ்ட் 1 முதல், சென்னை கோயம்பேட்டில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும், கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவர வேண்டும், ஜனநாயக ரீதியிலான போராட்டங்களை அமைதியான முறையில் நடத்த ஒரு நிரந்தரப் பொது இடம் வேண்டும் உட்பட்ட கோரிக்கைகளை முன்வைத்து காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இவர்களில் ரவிக்கு கடந்த ஆகஸ்ட் 6 அன்று ரத்த வாந்தி ஏற்பட்டதால், உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
இந்த சூழலில், தமிழக சட்டமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் 11 அன்று நீட் தேர்வை ரத்துசெய்யக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதைத் தொடர்ந்து, அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று அரசுத் தரப்பில் பாடநூல் கழகத் தலைவர் லயோலா மணி நேரில் சந்தித்து உறுதி அளித்தார். அதை ஏற்று 12 நாள்களாக நீடித்த போராட்டத்தை அவர்கள் முடித்துக்கொண்டனர்.