திரிஷா - நயினார் நாகேந்திரன் 
தமிழ் நாடு

“வாய் தவறி வந்துவிட்டது… மன்னிப்பு கேட்கிறேன்...” – நயினார் நாகேந்திரன்

Staff Writer

திரிஷா குறித்த அநாகரீக பேச்சுக்கு நயினார் நாகேந்திரன் இன்று பகிரங்கமாக வருத்தம் தெரிவித்துள்ளார்.

சேலத்தில் நடந்த நடிகரும், தவெக தலைவருமான விஜய்யின் நிகழ்ச்சியைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், விஜய் முதலில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டும், திரிஷாவிடம் இருந்து வெளியே வர வேண்டும் என்று தனிப்பட்ட வாழ்க்கை குறித்து விமர்சித்திருந்தார். இதற்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வந்தன.

இந்நிலையில், இன்று காலை மதுரையில் பேசிய நாகேந்திரன், இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, “யாருடைய மனதும் புண்படக் கூடாது என்று நினைப்பவன் நான்.” என்று தெரிவித்திருந்தார்.

மீண்டும் இன்று பிற்பகலில் நெல்லையில் ”தனிப்பட்ட விமர்சனங்களுக்கு இடமில்லை என்ற திரிஷாவின் கண்டன அறிக்கை குறித்த செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த நயினார் நாகேந்திரன், “என்னுடைய நீண்ட கால அரசியல் வாழ்க்கையில், நான் ஒருபோதும் யாரையும் தனிப்பட்ட முறையில் விமர்சிப்பதில்லை. அத்தகைய நாகரிகமற்ற விமர்சனங்களை நான் ஒருபோதும் அனுமதிப்பதும் இல்லை, இதுவரை நான் அவ்வாறு பேசியதும் இல்லை.

அன்று ஒரு குறிப்பிட்ட சூழலில் தற்செயலாக வாய் தவறி ஒரு வார்த்தை வந்துவிட்டது. அது தவறான ஒரு வார்த்தைதான் என்பதை நான் உணர்கிறேன். இந்த விவகாரம் தொடர்பாக கட்சியின் மேலிடம் தன்னிடம் பேசியது. பாஜக தேசிய மகளிரணி தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் இது குறித்து ஏற்கனவே என்னிடம் பேசியிருந்தார். அதேபோல், நேற்று முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்தபோது, அவரும் இந்த விவகாரம் குறித்து என்னிடம் விரிவாகக் கேட்டறிந்தார்.

இந்த விவகாரத்தில் யாராவது மன வருத்தம் அடைந்திருந்தால், அல்லது யாருடைய மனமாவது புண்பட்டிருந்தால், அதற்காக என்னுடைய மனப்பூர்வமான வருத்தத்தை நான் தெரிவித்துக் கொள்கிறேன்” என வெளிப்படையாக வருத்தம் தெரிவித்தார்.” என்று தெரிவித்துள்ளார்.