அமைச்சர் தங்கம்தென்னரசு 
தமிழ் நாடு

இடைக்கால பட்ஜெட்: பள்ளிக்கல்விக்கு ரூ. 48,534 கோடி ஒதுக்கீடு!

Staff Writer

தமிழக இடைக்கால பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ. 48,534 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2026-2027ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து உரையாற்றினார்.

பட்ஜெட் உரையின்போது அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்ததாவது: “பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ. 48,534 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

உயர்கல்வி பயிலும் மாணவர்கள் பட்டப்படிப்புடன் தொழில்நுட்பப் பயிற்சியும் பெரும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாணவர்கள் அனைவரும் இடைநிற்றலின்றி கற்பதற்கான சூழலை உருவாக்கிட தமிழக அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

இந்தக் குறிக்கோள்களை எட்டிட கல்லூரிகளின் உள்கட்டமைப்பு வசதிகள், உதவித்தொகை என பல்வேறு முன்னெடுப்புகளை அரசு செய்து வருகிறது.

கல்லூரி மாணவர்களின் தொழில்நுட்பத்திறனை வளர்க்க 10 லட்சம் பேருக்கு மடிக்கணினிகள் வழங்கும் திட்டம் அண்மையில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதுவரை 6,75,888 மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தை ஆசியாவின் முதன்மைப் பல்கலைக்கழகமாக மாற்றுவதற்கு ரூ. 1,380 கோடி செலவில் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நாட்டிலேயே உயர்கல்வி சேர்க்கையில் தேசிய சராசரியைவிட ஏறத்தாழ இரு மடங்காக 47 சதவீதம் பெற்று தமிழ்நாடு முன்னணில் உள்ளது.

உயர்கல்வித்துறைக்கு ரூ. 8,505 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.” என்றார்.