அமெரிக்காவின் செயற்கைக்கோளுடன் செலுத்தப்பட்ட இஸ்ரோவின் எல்விஎம்-3 எம்6 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் (இஸ்ரோ) இருந்து அமெரிக்காவின் ஏஎஸ்டி ஸ்பேஸ்மொபைல் நிறுவனத்தின் ப்ளூபேர்ட்-6 எனும் நவீன தகவல்தொடர்பு செயற்கைக்கோள், இஸ்ரோவின் எல்விஎம்-3 எம்6 ராக்கெட் மூலம் இன்று காலை 8.54 மணியளவில் விண்ணில் ஏவப்பட்டது.
அதனைத்தொடர்ந்து, தரையில் இருந்து புறப்பட்டு 15 நிமிஷம் 52 வது வினாடியில், 520 கி.மீ உயரத்தில், புவியின் தாழ் வட்ட சுற்றுப் பாதையில் செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் கூறும்போது, “இந்த ராக்கெட் ஏவப்பட்டது இந்தியாவிற்கு ஒரு புதிய மைல்கல் சாதனையாகும். இந்திய மண்ணிலிருந்து இதுவரை ஏவப்பட்ட மிகப்பெரிய செயற்கைக்கோள் இது.
இந்தப் பணியின் மூலம், இந்தியா இப்போது 34 நாடுகளைச் சேர்ந்த 434 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவிய பெருமையையும் பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் ககன்யான் திட்டத்தின் மீதான நம்பிக்கையை மேலும் அதிகரித்துள்ளது” எனத் தெரிவித்தார்.