ஜப்பானில் உள்ள குளிர்சாதனங்களைத் தயாரிக்கும் நிறுவனம், 'டூ ஹியூமன் பாக்ஸ்' எனப்படும் வாக் - இன் கூலிங் பெட்டியை உருவாக்கியுள்ளது. இதை 'மனித குளிர்சாதனப் பெட்டி' என்று அழைக்கிறார்கள்.
இந்த குளிர்சாதனப் பெட்டியில் உள்ளே அமர்வதற்கு வசதியாக ஒரு நாற்காலி அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பெட்டிக்குள் ஒரு நேரத்தில், ஒரு நபர் மட்டுமே உள்ளே செல்ல முடியும்.
இதன் உட்புற வெப்பநிலை 15 டிகிரி செல்சியஸாக இருக்கும். அந்தப் பெட்டிக்குள் சென்ற நபர் அமர்ந்ததும், அவரின் தலை, கழுத்து, தோள்பட்டை, முதுகுப் பகுதிக்கு 5 டிகிரி செல்சியஸில் குளிர்ந்த காற்று வீசும். இதனால் பெட்டிக்குள் சென்ற 10 நிமிடத்தில் உடலின் வெப்பநிலை குறைந்து உடல், இயல்பு நிலைக்குத் திரும்பிவிடும்.
வெயிலில் நீண்ட நேரம் வேலை செய்பவர்களுக்கு உடல்சோர்வு, வெப்ப பக்கவாதம் ஆகியவை ஏற்படாமல் தடுக்க உதவும்.
இது சாதாரண ஏசியைவிட பாதியளவு மின்சாரத்தை மட்டுமே பயன்படுத்துகிறது என்பதால் தொழிற்சாலை உரிமையாளர்களின் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இது தானாகவே 20 நிமிடங்களில் அணைந்துவிடும் என்பதால், அதிகப்படியான குளிரினால் எந்த பாதிப்பும் ஏற்படாது.
மேலும், இந்தப் பெட்டியில் சக்கரங்கள் உள்ளதால், தேவைக்கேற்ப எளிதில் நகர்த்திக்கொள்ளலாம்.
இதன் விலை ரூ. 9 லட்சம் ஆகும். ஜப்பான் முழுவதும், பல இடங்களில் சோதனை அடிப்படையில் இந்த மனித குளிர்சாதனப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.