தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த பள்ளி மாணவர்களின் சேர்க்கை அரசுப் பள்ளிகளில் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக சரிந்ததாக ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் அமைப்பின் புள்ளிவிவரங்களில் தெரியவந்துள்ளது.
கடந்த 2023 - 2024ஆம் கல்வி ஆண்டுவரை அதிகரித்து காணப்பட்ட பள்ளி மாணவர்களின் சேர்க்கை, 2024 - 2025ஆம் கல்வி ஆண்டு முதல் குறைந்து வருவதாக அறிக்கைகள் சுட்டிகாட்டுகின்றன.
தொடக்கக் கல்வி நிலையில் குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்கள் சேருவதே, இந்த சரிவுக்கான முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. மேலும், தமிழகத்தில் பிறப்பு விகிதம் குறைந்து வருவதாக அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.
இதுபோன்ற பல காரணங்களை முன்வைத்தாலும், தனியார் பள்ளிகளில் கடந்த 2024 - 2025ஆம் ஆண்டைக் காட்டிலும் 2025 - 2026 ஆம் ஆண்டு, கூடுதலாக 1,76,762 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.
அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் மட்டுமே சேர்க்கை குறைந்துள்ளது.
அரசு தொடக்கப் பள்ளிகளில் போதுமான ஆசிரியர்கள் இல்லாததும், தனியார் கல்வி நிறுவனங்களில் எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகள் இருப்பதால் பெற்றோர்கள் தனியார் பள்ளிகளை தேர்ந்தெடுப்பதாக ஆசிரியர் சங்கங்கள் குற்றஞ்சாட்டியுள்ளன.