மதுரை, திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் 144 தடை உத்தரவு போட்ட மாவட்ட ஆட்சியரை மன்னிக்கலாமா என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கடுமையாகக் கேட்டுள்ளது.
உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பாக இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மாவட்ட ஆட்சியர் நேரில் ஆஜராகி நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார்.
" மதுரை மாநகர காவல்துறை ஆணையர், துணை ஆணையர், கோவில் செயலாளர் ஆகியோரை இதில் மன்னிக்கலாம். 144 தடை உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியரை எப்படி மன்னிக்கலாம்?” என்று அவர் கேட்டார்.
திருப்பரங்குன்றம் மலை தர்கா நிர்வாகம், பிற எதிர்மனுதாரர்கள் மேல்முறையீட்டுக்குச் சென்றதை ஏற்றுக்கொள்ளலாம்; ஆனால் கோயிலின் செயல் அலுவலர் மேல்முறையீட்டுக்குச் சென்றதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் கேள்வியை முன்வைத்தார்.
அடுத்த விசாரணையில் மாநகர காவல்துறை ஆணையர், துணை ஆணையர், கோயில் செயல் அலுவலர் விசாரணைக்கு வரவேண்டியதில்லை என்றும் ஆனால் மாவட்ட ஆட்சியர் கட்டாயம் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி சுவாமிநாதன் கூறிவிட்டார்.