கர்நாடகத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழர்கள் தொடர்பாக என்ன செய்ய வேண்டும் என்று கர்நாடக அரசுக்குத் தெரியும் என்று கர்நாடக முதல்வர் டி. கே. சிவகுமார் கூறியுள்ளார்.
கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் காவிரி வனவிலங்கு சரணாலயத்தை ஒட்டிய வனப்பகுதியில் கர்நாடக வனத்துறையால் 3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
அந்தோணிசாமி, ஜான்ரோஸ் பீட்டர், குமார் ஆகிய 3 தமிழர்கள் மான் வேட்டையாடியதாக கர்நாடக வனத்துறையினர் சுட்டுக் கொன்றனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், கர்நாடக முதல்வர் டி.கே. சிவக்குமார் தனது கருத்தினைக் கூறியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
"எந்த மாநிலமும் இன்னொரு மாநிலத்தின் நிர்வாகத்தில் குறுக்கிடக் கூடாது. யாராக இருந்தாலும் பரவாயில்லை, அனைவருக்கும் அடிப்படை பண்பு என்பது வேண்டும்.
தமிழகத்தின் சட்ட ஒழுங்குப் பிரச்னையில் என்னால் தலையிட முடியாது. ஒவ்வொரு மாநிலத்திற்கும், அதற்கென தனி நடைமுறைகள் இருக்கும்.
கர்நாடக அரசை பாதுகாக்க எங்களுக்குத் தெரியும். நாங்கள் எங்கள் வேலையைப் பார்க்கிறோம். மற்றவர்கள் அவர்களுடைய வேலையைப் பார்க்கட்டும்." என்று கர்நாடக முதல்வர் டி.கே. சிவக்குமார் கூறியுள்ளார்.