கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பங்களை சென்னைக்கு அழைத்து தவெக தலைவர் விஜய் ஆறுதல் கூறினார்.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை தனித்தனி அறைகளில் சந்தித்து அவர்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்ததாக கூறப்படுகிறது.
கரூா் வேலுச்சாமிபுரத்தில் செப்டம்பர் 27ஆஆம் தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக பிரசார பரப்புரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து, செப். 30-ஆம் தேதி தவெக தலைவர் விஜய் காணொலி வெளியிட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
அவர் பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சென்று சந்திப்பாரா மாட்டாரா என்ற கேள்வி எழுந்தது. ஆனால், அவர் கரூா் செல்வதில் பல்வேறு சிக்கல்கள் எழுந்ததால் சந்திப்பு கைவிடப்பட்டது.
இந்நிலையில், கடந்த 18-ஆம் தேதி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரின் வங்கிக் கணக்கில் தலா ரூ.20 லட்சம் வீதம் தவெக சார்பில் வரவு வைக்கப்பட்டது. நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சென்னைக்கு நேரில் வரவழைத்து அவா்களுக்கு ஆறுதல் கூற விஜய் முடிவு செய்தார்.
இதையடுத்து, சென்னையிலிருந்து வந்த தவெக வழக்குரைஞா்கள், நிா்வாகிகள் மற்றும் கரூா் மாவட்ட நிர்வாகிகள் ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை காலை உயிரிழந்தவா்களின் வீடுகளுக்கு நேராக சென்று அவா்களை 5 பேருந்துகளில் சென்னைக்கு அழைத்து வந்தனர். 150-க்கும் மேற்பட்டோர் வந்ததாக கூறப்படுகிறது.
தொடர்ந்து அவா்கள் சென்னையில் இரவு தங்கவைக்கப்பட்ட நிலையில், இன்று மகாபலிபுரத்தில் உள்ள விடுதியின் அரங்கில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து விஜய் ஆறுதல் கூறியிருக்கிறார்.
இந்த சந்திப்பின்போது விஜய் என்ன கூறினார், பாதிக்கப்பட்ட மக்கள் என்ன கோரிக்கை வைத்தனர் என்பது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.