கரூரில் தவெக தலைவர் விஜய் நடத்திய பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் மரணமடைந்துள்ளனர். 50 பேருக்கும் மேல் காயமடைந்துள்ளனர். பலியானவர்களில் குழந்தைகளும் அடங்குவர்.
சனிக்கிழமை நாமக்கல்லில் பிரச்சார பயணத்தில் ஈடு பட்ட விஜய், அதை முடித்துக்கொண்டு கரூர் சென்றவர் இரவு 7:15 மணி அளவில் பேசத் தொடங்கினார். அவரது பேச்சைக் கேட்க கூட்டம் முண்டி அடித்ததில் நெரிசல் ஏற்பட்டு இந்த அசம்பாவித சம்பவம் ஏற்பட்டுள்ளது. காலை பத்துமணியிலிருந்தே கரூர் வேலுசாமிபுரத்தில் மக்கள் விஜயைக் காண கூடி இருந்தனர். விஜயின் வாகனம் வந்தபோதே அதற்காக ஒதுங்கியபோது நெரிசல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. நெரிசலை உணர்ந்த விஜய் தன் பேச்சை விரைவில் முடித்துக்கொண்டார். அவரது பேச்சின்போதே மயங்கி விழுபவர்களைக் கண்டு ஆம்புலன்ஸ் வரவழைக்குமாறு கேட்டுக்கொண்டிருந்தார். அவரது வாகனம் புறப்பட்டுச் சென்றபின் ஆம்புலன்ஸ்கள் வந்து பாதிக்கப்பட்டோரை மருத்துவமனைக்கு ஏற்றிச் சென்றன.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்த சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
கரூரில் இருந்து வரும் செய்திகள் கவலை அளிப்பதாகவும் தேவையான உதவிகளைச் செய்ய அமைச்சர்களையும் மாவட்ட நிர்வாகத்தையும் அறிவுறுத்தி இருப்பதாக முதலமைச்சர் முக ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
விசாரணை ஆணையம்
இதைத் தொடர்ந்து இரவே கரூருக்கு தமிழக முதல்வர் புறப்பட்டுச் சென்றார். உயிரிழந்தவர்களுக்கு 10 லட்சம் இழப்பீடும் காயம்பட்டோருக்கு 1 லட்சம் இழப்பீடும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த சம்பவம் பற்றி ஆராய ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையமும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த அதிர்ச்சிகரமான உயிரிழப்பு சம்பவத்துக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.
ஏராளமான பொதுமக்கள் கூட்டம் கூடுகையில் நெரிசலில் சிக்கி இதுபோன்ற சாவுகள் ஏற்படுவதைத் தவிர்க்க அனைத்து தரப்பினருமே பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என பொதுமக்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர். ஆனால் இதனிடையே பல்வேறு வதந்திகளும் சமூக ஊடகங்களில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதால் அனைத்து தரப்பினரும் பொறுப்புடன் இருக்கவேண்டிய கட்டாயம் உருவாகி உள்ளது.