கேரள மாநிலத்தின் உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா, தமிழக முதல்வர் விஜய்யை இன்று சந்தித்தார்.
கேரள அரசு சார்பில் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராகத் தொடங்கப்பட்ட ஆபரேஷன் டூஃபான் என்ற திட்டத்திற்கு அண்டை மாநிலங்களை ஒருங்கிணைத்து வருகிறார். தமிழக அரசின் ஆதரவைக் கோருவதற்காக இன்று முதல்வர் விஜய்யைச் சந்தித்துள்ளார்.
சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ரமேஷ் சென்னிதலா கூறியதாவது:
"போதைப்பொருள் கடத்தலை முழுமையாகத் தடுக்க வேண்டும். தற்போது பள்ளி, கல்லூரி மாணவர்களிடத்தில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து வருகிறது.
இதைத் தடுப்பதற்கு முறையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். கேரள, தமிழக எல்லைகளில் கண்காணிப்பு தீவிர படுத்தப்படும்.
மேலும், ஆபரேஷன் டூஃபானுக்கு கேரள மாநிலத்தின் தூதுவராக மோகன்லால் இருக்கிறார். தமிழக முதல்வரும் இந்தத் திட்டத்திற்குத் தூதுவராக செயல்பட்டு, இளைஞர்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும். இருவரும் இணைந்து சொன்னால், இளைஞர்கள் கண்டிப்பாக கேட்பார்கள்.
தமிழக முதல்வர் இந்தத் திட்டத்திற்கு முழு ஆதரவு தருவதாகத் தெரிவித்தார். தென்மாநிலங்களில் உள்ள அனைத்து கட்சிகளும் இந்தத் திட்டத்திற்கு ஆதரவு கொடுக்க வேண்டும். அப்போது தான் இந்தத் திட்டம் வெற்றியடையும்." என்று ரமேஷ் சென்னிதலா கூறினார்.