திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் குதிரையேற்றம் செய்யும் இளைஞர் ஒருவர், பிற சாதியினரால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ள கொடூரம் அரங்கேறியுள்ளது.
கொடைக்கானல், பூம்பாறை கிராமத்தைச் சேர்ந்த ராமர், பிரசாந்த் ஆகிய இளைஞர்கள் மலைப் பகுதியிலிருந்து காய்கறிகளை ஏற்றிவந்து வாகனத்தில் சேர்க்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். கடந்த 30ஆம் தேதி தங்கள் நிலத்தில் ராமரின் குதிரை மேய்ந்துவிட்டதாகக் கூறி, ரகு என்பவன் அழைத்துச் சென்றுள்ளான்.
அவனுடன் மேலும் 5 பேர் ராமரைக் கூர்மையான ஆயுதங்களால் தாக்கியதில் அவர் கொல்லப்பட்டார். உடன்சென்ற பிரசாந்த் தேனி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதில் குற்றவாளிகளில் ஒருவன் மட்டும் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் ராமரின் உறவினர்களும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களுடன் போலீசார் சமாதானம் பேசி போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்தனர்.
வன்கொடுமை சட்டப்படி வழக்கு பதியப்பட்ட நிலையில், அந்தச் சட்டப்படி பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு தீருதவி, அரசு வேலை, இரு மகள்களுக்கு படிப்பு உதவி ஆகியவற்றை வழங்கவேண்டும் என தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தியுள்ளது.