குமரி அனந்தன் 
தமிழ் நாடு

குமரிஅனந்தன் மரணம்! ’போய்வாருங்கள் அப்பா...’- தமிழிசை உருக்கம்!

Staff Writer

தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான குமரி அனந்தன் காலமானார். 1933 ஆம் ஆண்டு பிறந்த இவர் காமராஜரால் காங்கிரஸ் கட்சிக்குக் கொண்டுவரப்பட்டவர். தமிழ் இலக்கியத்தில் பெரும் புலமை கொண்டிருந்த இவர், சிறந்த பேச்சாளராகத்திகழ்ந்தவர். தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர், இந்திய மக்களவை, தமிழக சட்டமன்ற உறுப்பினர் போன்ற பதவிகளை வகித்தவர்.

29 நூல்களை எழுதிய இவர் இலக்கிய செல்வர் என்று அறியப்பட்டார். மது ஒழிப்பு, பனைப் பாதுகாப்பு போன்ற பிரச்னைகளில் அக்கறை காட்டி வந்தார்.

சில நாள்களாக உடல் நலமின்றி தனியார் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டிருந்த இவர் செவ்வாய்க்கிழமை இரவு 12.15 மணிக்குக் காலமானார்.

2024-ஆம் ஆண்டு தமிழக அரசால் தகைசால் தமிழர் விருது இவருக்கு வழங்கப்பட்டது.

தந்தையுடன் தமிழிசை

குமரி அனந்தன் மறைவை ஒட்டி அவரது மகளும் தமிழக பாஜக மூத்த தலைவருமான மருத்துவர் தமிழிசை சௌந்தரராஜன் உருக்கமாக விடை கொடுத்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

‘தமிழ் கற்றதனால் நான் தமிழ் பேசவில்லை... தமிழ் என்னைப் பெற்றதனால் நான் தமிழ் பேசுகிறேன் என்று.... பெருமையாக . பேச வைத்த என் தந்தை திரு.குமரி அனந்தன் அவர்கள்... இன்று என் அம்மாவோடு.. இரண்டர கலந்து விட்டார்... குமரியில்.. ஒரு கிராமத்தில் பிறந்து.. தன் முழு முயற்சியினால்... அப்பழுக்கற்ற அரசியல்வாதியாக... தமிழ் மீது.. தீராத பற்று கொண்டு... தமிழிசை என்ற பெயர் வைத்து... இசை இசை... என்று கூப்பிடும் என் அப்பாவின்... கணீர் குரல்... இன்று காற்றில்.. இசையோடு கலந்து விட்டது.... வாழ்க்கை இப்படித்தான் வாழ வேண்டும் என்று... சீரான வாழ்க்கை வாழ்ந்தவர்... இன்று தான் வளர்த்தவர்கள் எல்லாம்... சீராக வாழ்வதைக் கண்டு... பெருமைப்பட்டு.. வாழ்த்திவிட்டு.. எங்களை விட்டு மறைந்திருக்கிறார்... என்றும். .. அவர் பெயர் நிலைத்திருக்கும். தமிழக அரசியலில்.. பாராளுமன்றத்தில் முதன் முதலில் தமிழில் பேசியவர் இன்று தமிழோடு காற்றில் கலந்துவிட்டார் என்று சொல்ல வேண்டும்.... மகிழ்ச்சியோடு போய் வாருங்கள் அப்பா... நீங்கள் மக்களுக்கு என்ன எல்லாம் செய்ய வேண்டும் என்று நினைத்தீர்களோ... அதை மனதில் கொண்டு... உங்கள் பெயரில்... நாங்கள் செய்வோம் என்று... உறுதியோடு... உங்களை வழி அனுப்புகிறோம்... உங்கள் வழி உங்கள் வழியில்...... நீங்கள் எப்பொழுதும் சொல்வதைப் போல... நாமும் மகிழ்ச்சியாக இருந்து.. மற்றவர்களின் மகிழ்விக்க வேண்டும்.. என்று உங்கள் ஆசை ஆசையை.. எப்போதும் நிறைவேற்றுவோம்... போய் வாருங்கள் அப்பா தமிழ் கற்றதனால் நான் தமிழ் பேசவில்லை தமிழ் என்னைப் பெற்றதனால் நான் தமிழ் பேசுகிறேன்... நன்றி அப்பா.. மகிழ்ச்சியோடு போய் வாருங்கள்..’ இவ்வாறு பதிவிட்டுள்ளார்.