பிரேமலதா
பிரேமலதா 
தமிழ் நாடு

மக்களவைத் தேர்தல்: மார்ச் 19 முதல் தே.மு.தி.க.வில் விருப்ப மனு!

Staff Writer

மக்களவைத் தேர்தலில் தே.மு.தி.க. சார்பில் போட்டியிட விரும்புவோர் நாளை மறுநாள் முதல் கோயம்பேடு அலுவலகத்தில் விருப்ப மனு பெற்றுக் கொள்ளலாம் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 பாராளுமன்ற தொகுதிகளில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் போட்டியிட விரும்புகின்ற அனைத்து நிர்வாகிகளும், கழகத் தொண்டர்களும் பாராளுமன்ற தேர்தல் விருப்ப மனுக்களை 19.03.2024 செவ்வாய்க் கிழமை அன்று காலை 11.00 மணியிலிருந்து சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை கழகத்தில் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்களை 20.03.2024 புதன்கிழமை மாலை 5 மணிக்குள் தலைமை கழகத்தில் ஒப்படைக்க வேண்டும்.

பாராளுமன்றத் தேர்தலில் கழகத்தின் சார்பில் போட்டியிடுவதற்குரிய விருப்ப மனு அளிப்பதற்கு தேமுதிகவின் நிர்வாகிகளாக இருப்பவர்களும், கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இருப்பவர்களும் தகுதியானவர்கள் ஆவர். மேலும், பாராளுமன்ற பொது தொகுதிக்கான விருப்ப மனு கட்டணமாக ரூபாய் 15 ஆயிரமும், தனித் தொகுதிக்கான விருப்ப மனு கட்டணமாக ரூபாய் 10 ஆயிரமும் செலுத்தி விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம்.

பாராளுமன்ற தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு 21.03.2024 வியாழக்கிழமை அன்று காலை 10 மணி அளவில் தலைமை கழகத்தில் நேர்காணல் நடைபெறும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்." என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.